"மலேசியா டூ அம்னீஷியா', "வினோதயா சித்தம்' உள்ளிட்ட படங்களின் வரிசையில் ஜீ5 வெளியீடாக அடுத்து வரவுள்ள படம் "முதல் நீ முடிவும் நீ'. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்குநராக தனது பயணத்தை துவங்கியுள்ளார், சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் இப்படத்தை தயாரித்துள்ளார். நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது பற்றியான கதைக்கருவாக உருவாகி வரும் படம் " முதல் நீ முடிவும் நீ'. 90 காலக் கட்டத்தில் சென்னையில் படித்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. இளைய சமுதாய சிறுவர்களின் மனவெளியைப் பிரதிபலிப்பதுடன், அந்தக் காலத்தின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நியூயார்க் திரைப்பட விழாவில், இப்படத்துக்கு சிறப்பு மிகு கெளரவ விருது அளிக்கப்பட்டுள்ளது குறிப்படதக்கது. மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விழாவில், சிறந்த இயக்குநர் விருதையும் இப்படம் வென்றுள்ளது. அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், ஓ.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் வரும் 21-ஆம் தேதி ஜீ 5 ஒ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.