வாரிசுகளின் வரிசையில் அடுத்து சினிமாவுக்கு வருகிறார் சந்திரபாபுவின் பேரன் சாரத். இவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நடிக்கும் படம் "தெற்கத்தி வீரன்'. "முருகா' அசோக், "நாடோடிகள்' பரணி, "மாரி' வினோத், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன் உள்ளிட்டோர் பிற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
என். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் எடிட்டிங் செய்துள்ளார். படம் குறித்து சாரத் பேசும் போது...
""தூத்துக்குடியில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பே திரைக்கதை. எனது சொந்த ஊரும் தூத்துக்குடிதான். அங்கு நடந்த உண்மை சம்பவத்தையே நான் படமாக்கியுள்ளேன். 5 வில்லன்கள் நான்கு நண்பர்களுக்கிடையே எழும் பகையும் அதனால் நடக்கும் மோதல்கள்.... அதற்குள் பின்னப்பட்ட ஒரு காதல் என திரைக்கதை, விறுவிறுப்பாகவும் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும்.
படத்தில் 8 சண்டை, 5 பாடல்கள் இடம்பெறுகிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா சார் நீண்ட நாட்களுக்குப் பிறகு கதையின் துவக்கப் பாடலை பாடியுள்ளார். இதுதான் எனக்கு முதல் படம். எனது மானசீக குருவே சினிமாதான். தவிர இன்றும் தமிழ் சினிமாவால் கொண்டாடப்படும் சந்திரபாபுவின் பேரன் நான். அவரது ரத்தம் எனக்குள்ளும் இருப்பதால் நான் சினிமாவுக்கு வர காரணமாக இருக்கலாம்'' என்றார்.