குரு சாய்ராம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "335 கே எம்'. ஸ்ரீப்ரியா, பூஜா, ராபர்ட், நந்தா, அசோக், சுப்பு உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
பாரதிராஜாவின் உதவியாளர் ஏ. குரு இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""ஆண்மையும் பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்மையை அடைந்து விட வேண்டும் என நினைப்பதுதான் காரணம். ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம் மனிதர்களாக ஆகிறோம் என்பது நம்பிக்கை.
பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். பெண்களுக்கு எதிராக சமீபமாக அரங்கேற்றப்பட்டு வரும் பாலியல் தொந்தரவுகளை முன் வைக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது'' என்றார் இயக்குநர்.