விஜய் - நெல்சன் கூட்டணியின் படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் 16 நாள்கள் நடைபெற்றது. பின்னர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கதைப்படி ஒரு அரண்மனை போன்ற மஹாலில் பிரம்மாண்ட காட்சிகளை, படமாக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் கரோனா 2-ஆவது அலை தீவிரமாக பரவி வருவதால் தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியம் இல்லை. இதனால் சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் ஷாப்பிங் மால் போன்று பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கலாம் என படக்குழுவினர் முடிவெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கரோனா நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அரங்குகள் அமைக்கும் பணிகளை தொழிலாளர்கள் நலன் கருதி நிறுத்தப்பட்டுள்ளதாம். அதனால் இந்த மாதம் தொடங்க இருந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் இன்னும் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.