ஒன்றுபட்ட ஆந்திராவில் போச்சம்பள்ளி கிராமத்தில் ஒரு சமயம் வினோபாஜி பூமிதான இயக்கத்துக்கு நிலச்சுவான்தாரர்களிடம் நிலங்கள் தருமாறு பிரார்த்தனைக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். அப்போது ராமசந்திர ரெட்டி என்ற பெரும் நிலச்சுவன்தரர் எழுந்து 5 ஏக்கர் நிலத்தை பூமிதான இயக்கத்துக்குத் தருவதாக அறிவித்தார்.
உடனே வினோபாஜி" உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர்கள்? உங்களுக்கு மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் இருக்கின்றன?' என்று கேட்டார். அதற்கு ராமசந்திர ரெட்டி "நான்கு சகோதாரர்கள் நாங்கள். எங்களுக்கு சொந்தமாக மொத்தம் 500 ஏக்கர்கள் நிலம் உள்ளன' என்றார்.
இவற்றை கேட்ட வினோபாஜி "சிரித்துக்கொண்டே என்னையும் உடன் பிறவா ஒரு சகோதரராக ஏற்றுக் கொண்டு, என் பங்கை தாருங்களேன்' என்று கேட்டார். ராமசந்திர ரெட்டி மிகவும் மனம் நெகிழ்ந்து போனார். வினோபாஜியை சகோதரராக ஏற்றுக்கொள்கிறோம் என்று மிக்க மகிழ்ச்சியுடன் சொன்னார். பூமிதான இயக்கத்திற்கு 100 ஏக்கர் நிலத்தை தானமாக பத்திரபதிவு செய்து கொடுத்தார். ராமசந்திர ரெட்டி குடும்பத்தை மக்கள் மிகவும் போற்றி புகழ்ந்தார்கள்.
("உலகம் போற்றும் பூமிதான இயக்கம்' என்ற நூலிலிருந்து)