அண்மையில் நடந்து முடிந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமாக்கள் பல திரையிடப்பட்ட போதும், இந்தியன் பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள் தேர்வாகி இருந்தது. அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் க்ரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட "அமலா' படமும் தேர்வாகி இருந்தது. திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை இந்தப் படம் பெற்றது.
இயக்குநர் பேசும் போது.... ""ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். குறிப்பாக காதல், எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்த கதை பயணமாகும். எல்லாத் தரப்பினருக்கும் படம் பிடித்திருந்ததாக சொன்னார்கள். விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது'' என்றார் இயக்குநர்.