சமீபத்தில் வெளியான "ட்ரிப்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கவனம் ஈர்த்தவர் ராஜேஷ் சிவா. அடுத்தடுத்து புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ராஜேஷ் சிவா. அவரிடம் பேசும் போது.... ""எந்த பின்புலமும் இல்லாமல் விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் போராடி மேலே வருபவர்களைத் தமிழ் சினிமா கைவிட்டதே இல்லை. அதற்கு யோகி பாபு போன்றவர்களே உதாரணம். இதுதான் நான் சினிமாவுக்குள் நுழைய காரணம். இன்னும் என்னை உயிர்ப்புடன் இயங்க வைத்திருப்பதும் இந்த நம்பிக்கையும் நல்ல நண்பர்களும் தான். நடிக்க வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது லட்சியம்.
விவரம் தெரிந்த நாள் முதலே சினிமாக்கள் பார்த்து பார்த்து என் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டேன். "ஒருநாள் கூத்து', "புரூஸ்லி' , "குப்பத்து ராஜா' படங்கள் நல்ல அறிமுகம் தந்தது. அடுத்து "சர்வர் சுந்தரம்' படத்தில் 4 வில்லன்களில் ஒருவராக நடிக்கிறேன். ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இருவரும் என் வாழ்க்கையில் முக்கியமானவர்கள். எனக்கு அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தி இந்த நிலைக்குக் கொண்டு வந்தனர். இருவரும் எனக்கு செய்த உதவிகளை மறக்க முடியாது. விஜய் ஆண்டனியின் "தமிழரசன்', சமுத்திரகனியின் "வெள்ளை யானை' படங்களின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறேன். இவை தவிர இணையத் தொடர் ஒன்றிலும் நடிக்க இருக்கிறேன். நாயகன், வில்லன் என்றெல்லாம் இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நன்றாக நடித்துப் பெயர் எடுக்கவேண்டும் என்பதே ஆசை'' என்றார் ராஜேஷ் சிவா.