சமீபத்தில் வரவுகளில் கவனம் ஈர்க்கிறார் அபிதா வெங்கட். "கேர் ஆஃப் காதல்' மற்றும் "கமலி நடுக்காவேரி' படங்களில் நடித்துக் கவனம் பெறுகிறார். அசல் சென்னை பொண்ணு. இன்ஜினியரிங் படித்து விட்டு ஃபேஷன் டிசைனிங் துறையில் கவனம் செலுத்தி வந்தவர், அதைத் தொடர்ந்து மாடலிங், விளம்பரப் படங்கள் என முத்திரை பதித்தார். விஜய்யின் "சர்கார்' படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு நிறையப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருந்தும் கதை தேர்வில் கவனமாக இருந்து படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார்.
சமீபமாக வந்துள்ள இந்த இரு படங்களின் கதை நகர்வுகளில் இவரது கதாபாத்திரம் கச்சிதமாகப் பொருந்தி வந்திருக்கிறது. ""அப்பா, அம்மாவுக்கு நான் நடிப்பதில் சின்னத் தயக்கம் இருந்தாலும் என் மீதும் என் திறமை மீதும் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. நல்ல படங்கள் நம்மை அடையாளம் காட்டும் என்பது உண்மையாகியுள்ளது.
"கேர் ஆஃப் காதல்' படமும் "கமலி நடுக்காவேரி'யும் நிரூபித்துள்ளன. தொடர்ந்து எந்த சவாலான வேடங்களாக இருந்தாலும் நடிப்பேன். "படையப்பா' எனக்கு அவ்வளவு பிடித்த படம். சின்ன வயதில் அதிக முறை நான் பார்த்த படம் அது. ரஜினி சாரை அதை விட அதிகமாகப் பிடிக்கும். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. இயக்குநர்களில் மணிரத்னம், பாலா, வெற்றிமாறன், ஷங்கர், ராஜமௌலி ஆகியோரைப் பிடிக்கும். அவர்கள் படங்களிலும் நடிக்க அழைப்பு வரும் என்று தன்னம்பிக்கையோடு காத்திருக்கிறேன்'' என்றார் அபிதா வெங்கட்.