கடந்த 2019 -ஆம் ஆண்டு வெளியான படம் "மிக மிக அவசரம்'. முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது சாலைகளில் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தபடும் பெண் காவலர்களின் வலியை பேசியதில் பரவலான வரவேற்பை பெற்றது இப்படம். சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பு வெளியிட்டது. இப்படம் பேசிய வலியை தற்போது தமிழக முதல்வர் தீர்த்து வைத்துள்ளார். அதாவது இனி முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது சாலைகளில் பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக படத்தின் விநியோகஸ்தர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது...
""நல்ல படத்தை வெளியீட்டோம் என்பதில் எங்களது நிறுவனம் பெருமை கொள்கிறது. படத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய கவனமும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வணிக ரீதியான வெற்றி கிடைக்கவில்லை என்பதைத் தாண்டி, மிக மிக அவசியமான ஒரு படம் மக்களை சென்று சேரவில்லையே என்பதுதான் எங்கள் குழுவின் மிகப்பெரும் வருத்தமாக இருந்து வந்தது. எந்த வலியை "மிக மிக அவசரம்' படம் பேசியதோ, அந்த வலியை ஏற்படுத்தும் சூழலையே மாற்றியமைத்திருக்கிறது முதல்வரின் இந்த உத்தரவு. இந்நேரத்தில் இப்படியொரு கதையை எழுதிய ஜெகன்நாத், திரைக்கதை எழுதி இயக்கிய இயக்குனர் சுரேஷ் காமாட்சி ஆகியோரை பாராட்டுகிறேன்.''என்று தெரிவித்துள்ளார்.