கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் கூலி தொழிலாளர்கள் மற்றும் சாலையோரங்களில் வாழ்பவர்களுக்கு உதவிக்கரம் நீண்டு வருகின்றன. திரை பிரபலங்கள் பலர் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நட்சத்திரங்கள் நல உதவிகளை செய்து மக்களை மீட்டெடுத்து வருகின்றனர். யோகி பாபு, நடன இயக்குநர் தினேஷ் இருவரும் நடித்து வரும் படத்தின் சார்பாக பலருக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. பெயர் இடப்படாத இப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் எழுதி இயக்குகிறார்.
இப்படத்தை தயாரித்து வரும் இசையமைப்பாளர் வி.ஆர். ராஜேஷ் பேசும் போது.. ""பசி என்றால்... வெறும் வயிற்றுப் பசி மட்டும்தானா? இல்லை. பசி உருவாக்கும் புன்னகையும், துயரமும், நன்றியும், துரோகமும், காற்றைப்போல எங்கெங்கும் நிறைந்துகிடக்கின்றன. எல்லோருக்கும் பொதுவான மொழியாக இப்போது பசிதான் இருக்கிறது. பசியின் மொழி கண்ணீர் என்பதை உலகுக்கு அறிவித்தபடிதான் பிறக்கின்றன ஒவ்வோர் உயிரும். "உனது பசியை நான் உணர்ந்துகொள்கிறேன்' என்ற தாய்மையின் கருணையில்தான் தொடங்குகிறது ஒவ்வொருவருக்குமான உலகம். கரோனா என்பது மானுடத்துக்கு விடப்பட்ட இயற்கையின் சாபம். அது நிகழும் போது இருப்பவர்கள் வீட்டுக்குள் இருப்பதும், இல்லாதவர்கள் வீதிக்கு வருவதும் விதி. அதை எல்லோரும் சேர்ந்துதான் வெல்ல வேண்டும். அதற்காகவே இந்த உதவிகள். மூன்று வேளை உணவு என்பது என்னால் முடிந்த உதவி. படக்குழு சார்பாகவும் அதை செய்வதில் மகிழ்ச்சி'' என்றார்.