சக்தி ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "தராதிபன்'. கதாநாயகனாக அபி சரவணன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகின்றன. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஏ.சையத். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""
அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, ஏதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும். அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. நல்லவனாக வாழத்தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால், காலம் எல்லாவற்றையும் கண்ணெதிரே கலைத்து போட்டு விட்டு ஒன்றும் தெரியாத சிறுப்பிள்ளை போல் ஓடி ஒளிந்து கொள்கிறது. நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்பினமோ, அதை வெறுக்கிறோம், ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததை கொடுத்து கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்த காலம் ஒரு தனி மனிதனுக்கு என்ன பரிசளித்தது என்பதுதான் இங்கே கதைக்களம். நம்பிக்கை, துரோகத்தின் வலியை இன்னும் அக்கறையாக முன் வைக்கும் திரைக்கதை என்றார் இயக்குநர். ஒளிப்பதிவு - ந.சக்திவேல். இசை - முத்து கணேஷ். படத்தொகுப்பு - ஆனந்த் ஜெரால்டின். கலை - சாய்மணி. பாடல்கள் - கவிஞர் பிறைசூடன், மதுரா.