தமிழை விட தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் அவர் கைவசம் உள்ள படம், எஸ்.பி.ஜனநாதனின் "லாபம்'. தெலுங்கில் இந்த வருடம் அவரது நடிப்பில் "வக்கீல் சாப்' படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த வருடம் வெளியான மற்றுமொரு தெலுங்குப் படம் ரவி தேஜாவின் "க்ராக்'. ஹிந்தியில் "தி பவர்' படத்திலும் நடித்திருந்தார். பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் "சலார்' திரைப்படத்திலும் ஸ்ருதியே நாயகி.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது.... "" நான் ஒரு உளவியல் மாணவி. கல்லூரியை விட்டுப் பாதியில் வெளியேறிவிட்டாலும் உளவியல் படிப்பைத் தொடர்ந்தேன். மனநல ஆலோசகர்கள் பலர் என் நண்பர்களாக இருக்கின்றனர்.
சிறு வயதிலும் இப்போதும் நான் மனநல ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியோ அழுத்தமோ திரைத்துறையில் இரண்டுமே அதிகம். மனநலம் என்பது மிகவும் சாதாரணமான அதே நேரத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. நமக்கு வயிற்று வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று உதவி கேட்போம். ஆனால், மனநலம் என்று வரும்போது எதுவும் நடக்காதது போல தலையைத் தூக்கி நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்வது மோசமானது. மன நலனை பொருத்தவரை தாங்கள் எந்தவகையான பிரச்னையில் இருக்கிறோம் என்பது குறித்தே பலருக்கும் தெரிவதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.