செளடேஸ்வரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "எப்போ கல்யாணம்'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் சிசிலியராஜ்.
இவர் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் "உறவுக்கு கைகொடுப்போம்', "புண்ணியம் செய்தவள்', "வாய்இல்லாப்பூச்சி' போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
இயக்குநர் பேசும் போது...
""இன்றைய தலைமுறையினர் படிக்கும் வயதிலேயே காதல் செய்வதும், அதன் மூலம் என்னென்ன விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதையும் நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறேன். மிக முக்கியமான நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை ரமாபிரபா நடித்திருக்கிறார். நான் இதற்கு முன்பு ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா ஆகியோரின் மகளான மஹாலட்சுமியை "இளையப்பிறவிகள்' படத்தில் அறிமுகப்படுத்தினேன். ஜானகி அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது அரசை ஆதரித்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டார்கள் அப்போது அவர் என்னைதான் அந்தப்படத்திற்கு இயக்குநராக சிபாரிசு செய்தார். "ஊரே உனக்காக' என்ற அந்தப்படத்தில் தீபனும், ரஞ்சனியும் நடிப்பதாக இருந்தது. பிறகு கைவிடப்பட்டது. அதன் பிறகு நான் பெங்களூர் வந்து விட்டேன். மேல்கோட்டை என்கிற ஊரில் காதல் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் எடுத்தோம். அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்'' என்றார் இயக்குநர்.