உண்மை சம்பவங்களின் பின்னணியை ஆராய்ந்து அதை திரைக்கதையாக்கும் யுக்தி தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடப்பது வழக்கம். இந்த வகையில் தமிழகத்தில பரபரப்பாகப் பேசப்பட்ட சிலை கடத்தல் வழக்கு படமாகவுள்ளது.
பல தமிழ்ப் படங்களை தயாரித்து வரும் ஜி.பி.ஆர்.எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் எஸ்.சிவபிரகாஷ் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து நடிக்கிறார். "பாகுபலி', "கபாலி' மற்றும் "விவேகம்' போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியமான படங்களுக்கு கிராபிக்ஸ் துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
"கருப்பு கண்ணாடி' படத்தின் கதாநாயகனும், அருள்நிதியின் "டைரி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் டி.வி தொகுப்பாளர் தணிகை இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வியன் ராஜா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் ராம் இப்படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். பழங்காலக் கோயில் ஒன்றில் சிலை திருடு போக, அதைத் தொடர்ந்து பல கொடூர மரணங்கள் நிகழ்கிறது. அதற்கான காரணங்களை கதாநாயகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதை பல திருப்பங்களுடன் இப்படம் உருவாகவிருக்கிறது. படத்தின் துவக்க விழா நடந்துள்ள நிலையில் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.