பல மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தம், திரையரங்குகள் இயங்காத சூழல் இவற்றால் தமிழ் சினிமா உலகம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியிசை பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்து ஆல்பங்கள் உருவாகி வருகின்றன.
"நினைக்காத நாளில்லை', "தீக்குச்சி', "அக்கி ரவ்வா' (தெலுங்கு) உள்ளிட்ட திரைப்
படங்களை இயக்கிய ஏ. எல். ராஜா, தனது நண்பர்களுக்காக "ஓரு வினா, ஓரு விடை' என்ற ஆல்பத்தை தற்போது இயக்கியுள்ளார். இந்த ஆல்பம் பற்றி அவர் பேசும் போது....
""இசையமைப்பாளர் ஆர். எஸ். ரவிப்பிரியன் மற்றும் பாடலாசிரியர் செந்தமிழ் ஆகியோர் ஒரு பாடலை பதிவு செய்தனர். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு பாடலை இயற்றி அதற்கான காட்சிகளை அமைக்க என்னை அவர்கள் அணுகினர். அவர்கள் என்னுடைய சிறந்த நண்பர்கள் என்பதால், நான் அந்த பணியை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளேன்.
பாடலின் தனித்தன்மை என்னவென்றால், பாடலின் கதாநாயகன் ஸ்ரீஹரி பேசவும் கேட்கவும் முடியாதவர் ஆவார். ஆனால் அவர் மிகவும் திறமையானவர். ஏற்கெனவே ஒரு மலையாளம் படத்தில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். அவர் நடனமாடுவதிலும் வல்லவர். ஸ்ரீஹரி இந்தப் பாடலில் நன்றாகப் பொருந்துவார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன், தற்போது நான் இயக்கி வரும் "சூரியனும் சூரியகாந்தியும்' படத்திற்குப் பிறகு இயக்கவிருக்கும் படத்தில் ஸ்ரீஹரியை கதாநாயகனாக நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். படத்தில் விதார்த், அப்பு குட்டி, விக்ரம் சுந்தர், பிளாக் பாண்டி மற்றும் சந்தானபாரதி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்'' என்றார்.