சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் தேவைக்காக பொருள்களை வாங்குவதற்கு தியாகராய நகர், பாரிமுனை போன்ற பகுதிகளில் செல்ல வேண்டியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மொத்த பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்கும் சந்தை ஒன்று தற்போது உருவாகிறது இதற்கு "Market of India' என்று பெயர்.
இந்தியாவில் பெரிய அளவுக்கு மொத்த வர்த்தகம் நடக்கிறது. ஆனால் அவை தனித்தனியாக ஒவ்வொரு ஊர்களிலும் நடக்கிறது. உதாரணத்துக்கு ரிச்சி தெருவில் செல்போன் உள்ளிட்ட சாதனங்களை மொத்தமாக வாங்கலாம். இதுபோல சென்னையில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தொழிலுக்கு பிரதானம். அதேபோல பருப்பு சந்தைக்கு விருதுநகரும், துணி பிரிவின் மொத்த சந்தைக்கு சூரத் முக்கியமான இடமாக விளங்குகிறது.
இதுபோல ஒவ்வொரு நகரமும் அல்லது நகரத்தின் ஒரு பகுதி குறிப்பிட்ட பொருளுக்கான மைய இடமாக விளங்குகிறது. இவை அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால், மொத்த விலை சந்தையும் ஒரே இடத்தில் அமைந்தால் அதுதான் "மார்க்கெட் ஆப் இந்தியா' "Market of India'. ஆம் நம்ம சென்னையின் மையப்பகுதியில் இந்த மொத்தவிலை சந்தை தொடங்க இருக்கிறது. 2022-ஆம் ஆண்டு இந்த மையம் தொடங்கப்பட இருக்கிறது. பெரம்பூரில் உள்ள எஸ்.பி.ஆர் சிட்டியில் இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தவிலை சந்தை, குடியிருப்புகள், பள்ளி என சிறு நகரமே கட்டப்பட்டுவருகிறது.
புவியியல் அடிப்படையில் இந்த இடம் முக்கியமானது. சென்னை துறைமுகம், ரயில் நிலையம், அருகில் 3 மெட்ரோ நிலையங்கள், சென்னையில் முக்கியப் பகுதி என்பதால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு எளிதாக இருப்பதால் அதிக மக்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் வந்துசெல்ல முடியும். அதனால் இந்த இடம் செயல்படத் தொடங்கிய சில நாள்களில் சென்னையின் முக்கிய அடையாளமாக இந்த இடம் இருக்கும் என்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக, ரூ.5,500 கோடி மதிப்பிலான இந்த ‘Market of India' 63 ஏக்கர் நிலப்பரப்பளவில் 5,000-க்கும் மேற்பட்ட ஸ்டோர்களுடன் அமைய உள்ளது. வழக்கமான மால்களில் வாடிக்கையாளர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானப் பொருள்கள், ஜெம்ஸ், ஜூவல்லரி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். தற்போது 60 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. இதன் கட்டுமானம் 2022-இல் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு எல்ஐசி கட்டடத்தை பார்ப்பதற்காகவே மக்கள் சென்னைக்கு வருவார்கள். மார்க்கெட் ஆஃப் இந்தியா சென்னையின் அடையாளமாக மாறுமா?