கணேசபிள்ளை என்பவர் சரித்திர கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஆர்வம் உடையவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு உறவினர் கணேசபிள்ளை. சற்று கமுக்கமான பேர்வழி; யாரிடமும் மனம் விட்டு வெளிப்படையாக பேசமாட்டார்.
ஒரு நாள், கையில் ஒரு பெரிய காகிதகட்டுடன் வந்தார் கணேச பிள்ளை. அவரிடம் "கட்டெல்லாம் இருக்கிறதே என்ன விஷயம்' என்று கேட்டார் கவிமணி. சரியான பதில் கூறாமல் ஏதோ சொல்லி சமாளித்தார், கணேசபிள்ளை.
கணேசபிள்ளையின் மைத்துனரிடம் அந்த கட்டுக்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து வரச் சொன்னார் கவிமணி. அவன் அந்த தாள் கட்டையே எடுத்து வந்துவிட்டான்.
அதில் சுங்கான் கடை என்னும் இடத்துக்கு பக்கத்தில் தொன்மையான கோட்டை ஒன்று இருப்பதும் அதற்கான வரலாற்று ஆதாரங்களும் என தெரியவந்தது. அதை பற்றி சில குறிப்புகள் எடுத்து காகித கட்டை திருப்பி கொடுத்துவிட்டார் கவிமணி. இந்த ஆராய்ச்சி கட்டுரை தொடர்பாக, திருவனந்தபுரம் போய் சேர்ந்தார் கணேசபிள்ளை. ஆனால் அவர் போய் சேரும் முன்பே "திருவனந்தபுரம் டைம்ஸ்' எனும் ஆங்கில வார இதழில் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளிவந்திருந்தது. அதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனார் கணேசபிள்ளை.
தாம் பல நாள் முயன்று செய்த ஆராய்ச்சி அப்படியே தக்க சான்றுகளுடன் கட்டுரையாக வெளிவந்திருக்கிறதே என்ன ஆச்சரியம். இதை எழுதிய நாஞ்சில் நாடன் என்பவர் யார் என்று கடைசி வரை திகைப்புதான். கவிமணியின் இளமை குறும்புகளுள் இதுவும் ஒன்று.
(கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நூலிலிருந்து)