புத்தகத்தின் விற்பனையை நூல் ஆசிரியரின் பெயர் நிர்ணயித்தாலும், புத்தகத்தின் அட்டை வடிவமைப்பும் கவர்ச்சிகரமாக அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் வாசகரை அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்து புரட்டிப்பார்க்க வைக்கும். பல வகை நூல்களை ஓரிடத்தில் வைத்திருக்கும் நூலகத்திற்கு எதற்காகப் போகிறோம் ? நூல்களை வாசிப்பதற்குத்தானே!
கேரளத்தில் கண்ணனூர் மாவட்டத்தில் பையனூருக்கு அருகில் இருக்கும் காரையில் என்ற ஊரில் அமைந்துள்ளது லால் பகதூர் நூலகம். இந்த நூலகக் கட்டடத்தின் புதுமையான வடிவமைப்பின் காரணமாக மக்கள் நூலகத்தைப் பார்ப்பதற்காக வந்து செல்கின்றனர்.
நூலகக் கட்டடம் பல வகை, பல நிற புத்தகங்களை அழகாக நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்கும் வடிவமைப்பில் கட்டப்பட்டு கவர்ந்திருக்கிறது. செங்கல், கூரை ஓடுகள், சிமெண்ட் கலவை கொண்டு இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் சுமார் 6 ஆயிரம் நூல்கள் வாசகர்களின் வாசிப்பு பசிக்கு தீனி போடுகின்றன.
1967-இல் தொடங்கப்பட்ட இந்த நூலகம் மெல்ல மெல்ல வளர்ந்தாலும், கட்டடம் மிகவும் பழையதாக இருந்ததால் புதிய கட்டடம் கட்டத் தீர்மானம் ஆகியது. புதிய கட்டடத்தின் வடிவமைப்பு பலராலும் பேசப்பட வேண்டும்... நூலகத்திற்கு மக்கள் நூல்களை வாசிக்க வருகிறார்களோ இல்லையோ... நூலகக் கட்டடத்தை கேரளத்தின் பல இடங்களிலிருந்து மக்கள் பார்க்க வர வேண்டும்...கட்டடம் குறித்து பேச வேண்டும்... அதற்கேற்றவாறு மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமாக கட்டடத்தின் வடிவமைப்பு அமைய வேண்டும் என்று நூலக நிர்வாகக் குழு தீர்மானித்தது.
சிற்பி வெங்காரா கட்டடத்தை வடிவமைத்தார். புதிய நூலகக் கட்டடம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கரோனா காலத்தில் மூடப்பட்ட நூலகம் இந்த ஆண்டு பிப்ரவரி 8 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.