நெல்லை மண்ணில் இருந்து தமிழ் சினிமாவுக்குச் சென்று புகழ்பெற்ற கலைஞர்கள் பலர். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடிப்பது தெரியாமல் "வாழ்ந்து காட்டிய திருநெல்வேலி எஸ். பாலையா தான் அந்த மகா கலைஞர்.
பாலையாவை தமிழ் சினிமாவுக்குத் தந்தது நெல்லை மண் தான்.
நெல்லையுடன் இணைந்திருந்த தூத்துக்குடியில் பிறந்த கலைஞர் ஜே.பி சந்திரபாபுவை நீக்கிவிட்டு தமிழ் சினிமாவில் வரலாற்றை எழுதி விடவே முடியாது.
நெல்லை வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்துக்கும், தமிழ் சினிமாவுக்கும் கலைவாணர் காலத்தில் இருந்தே தொடர்பு இருக்கிறது. என்.எஸ்.கிருஷ்ணனின் எண்ணற்ற படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகள் எழுதிய சுப்பு ஆறுமுகம் கதையைத்தான்இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் "சின்னஞ்சிறு உலகம்' என்னும் திரைப்படமாக இயக்கினார்.
சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படும் டெல்லி கணேஷ் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்.
இசையமைப்பாளர்களில் ரவண சமுத்திரம் பரத்வாஜ், மாயூரம் வேத நாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரனும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் மாணவருமான விஜய் ஆண்டனி போன்றோரும் நெல்லைக்காரர்களே!
பாடகர் ஸ்ரீநிவாஸ், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர்.
"இதயம்' திரைப்படத்தை இயக்கிய அடிப்படையில் ஓவியரான இயக்குநர் கதிர், வணிக ரீதியான வெற்றிப் படங்களை இயக்கிய தரணி, இயக்குநர்கள் எஸ்.ஜே. சூர்யா, ஹரி, விக்கிரமன் போன்றவர்களும் நெல்லை மண்ணில் இருந்து வந்தவர்கள்தான்.