ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். சிட்கல் இந்த கிராமத்தை கின்னாரஸ் என்றும் அழைப்பர்.
கடவுளுக்கும், மனிதனுக்கும் இடைப்பட்ட பூமி என்பதாகும் இதன் பொருள்.
இந்தியாவின் கடைசி கிராமம் இது. இத்துடன் தரைவழி சாலை முடிகிறது. பர்மிட் இல்லாமல் பயணிக்கும் கடைசி கிராமமும் இது தான். இதையடுத்து சீன எல்லை துவங்குகிறது.
நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் கடைசி வரை இங்கு குளிர்காலம். பனிமூடி கிராமமே தெரியாது. சாலைகளை மூடிவிடுவர். கிராமத்தின் மொத்த ஜனத்தொகை மிகவும் குறைவு. அனைவரும் ஹிமாச்சல் பிரதேசத்தின் மற்ற கிராமங்களுக்கு சென்று பிழைப்பர். மார்ச் மாத கடைசியில் இதற்கான சாலை திறக்கும் போது கிராம மக்கள் திரும்ப வந்து அக்டோபர் மாதம் வரை இங்கு வாழ்வர்.
இயற்கை கொஞ்சும் பனி மலைகளும், ஆப்பிள் பண்ணைகளையும், மர வீடுகளையும் இங்கு ரசிக்கலாம். கண் கொள்ளா பள்ளத்தாக்குகள், கூடுதல் கவர்ச்சியாகும். இச்சமயத்தில் சுற்றுலா பயணியர் ஏராளமாய் இங்கு வருவர்.
இக்கிராமத்தில் உள்ள வீடுகள் மரத்தால் ஆனவை. பள்ளிக்கூடம் உள்பட பொது இடங்களில் மேலே தகடு கூரை போட்டிருப்பர்.
இங்கு புத்த கோயிலும், இந்து பெண் தெய்வ கோயிலும் உள்ளன. இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து 3,450 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இந்தியாவின் மிகத் தூய்மையான காற்றைக் கொண்டது இக்கிராமம் என டில்லி ஐ.ஐ.டி. ஆய்வுக்குழு சான்று வழங்கியுள்ளது.
டில்லியில் இருந்து 600 கி.மீ. தொலைவிலும், சிம்லாவிலிருந்து 250 கி.மீ. தொலைவிலும் இக்கிராமம் உள்ளது.