இப்போதுள்ள இளைய தலைமுறையினரில் முழுக்கத் தூங்காமல் செல்லிடப்பேசி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதிகம். இது ஒரு வகையில் தீமையான பழக்கம் என்றாலும் ஒரு விதத்தில் நன்மை அளித்திருக்கிறது. ஆமாம், இளைஞர் ஒருவர் இரவு செல்லிடப்பேசி பார்த்து கொண்டிருந்ததால் 75 உயிர்களை காப்பாற்றியுள்ளார். எங்கே, எப்படித் தெரியுமா?
மகாராஷ்டிர மாநிலத்தின் டோம்பிவிலியின் கொபர் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதான குணால். இரவு முழுக்கச் செல்லிடப்பேசி பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர். வீட்டில் அம்மா-அப்பா சத்தம் போட்டாலும அதைக் காதில் வாங்காமல் தான் நினைத்ததை செய்யும் பழக்கம் உடையவர். சம்பவம் நடந்தது எப்படி விவரிக்கிறார் குணால்:
""அந்த நாள் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. செல்லிடப்பேசியில் வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வீட்டின் சமையலறையில் தண்ணீர் குடிப்பதற்காகச் சென்றேன். அப்போது கட்டடத்தில் விரிசல் விழுவதைப் பார்த்தேன். ஏற்கெனவே கட்டடம் எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் தான் இருந்தது. அந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டுதான் மாநகராட்சியினர் 9 மாதங்களுக்கு முன்பே இந்தக் கட்டடத்தைக் காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுத்தனர். இந்த குடியிருப்பில் வசித்த 18 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுமே கூலி வேலை செய்பவர்கள். இந்த இடத்தைக் காலி செய்தால் வேறு எங்கு செல்வது என்ற நிலையில் தான் தொடர்ந்து இங்கு வசித்து வந்தோம்.
சமையல் அறையில் விரிசல் விழுவதைப் பார்த்ததும், அது சாதாரண விரிசல் இல்லை கட்டடம் இடிந்து விழுவதற்கான அறிகுறி என்பதைத் தெரிந்து கொண்டேன். அந்த நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்ததால் வேறு யாரும் விரிசலை பார்த்திருக்க வாய்ப்பில்லை. முதலில் என் வீட்டிலுள்ளவர்களை எழுப்பினேன். தொடர்ந்து மீதியுள்ள 17 குடும்பங்களிடம் பதற்றத்துடன் விஷயத்தைச் சொன்னேன். முதலில் உயிரை காப்பாற்றுவது அவசியமாகப்பட்டது. 75 நபர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என சாலைக்கு வந்துவிட்டோம்.
நாங்கள் வந்த 10 ஆவது நிமிடத்தில் ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழுந்து விட்டது. நாங்கள் வீட்டிலிருந்து எந்த பொருள்களையும் எடுத்துக் கொண்டு வர முடியவில்லை. தற்போது எங்களின் நிலையைப் பார்த்து சில சமூக சேவகர்கள் உதவி செய்து வருகிறார்கள். வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் தொடர்ந்து இந்தப் பகுதியில் தான் கூடாரம் அமைத்துக் குடும்பம் குடும்பமாக இருந்து வருகிறோம்.இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் 75 உயிர்களைக் காப்பாற்றியதற்காக என்னையும் நிறையப் பேர் பாராட்டினார்கள்'' என்றார் குணால். சமூக வலைத்தளங்களில் குணாலுக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.