அடுத்தடுத்த வாய்ப்புகளில் அழுத்தமான முத்திரை பதிக்க வருகிறார் நடிகர் நிமல். சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருந்தவர், இப்போது நடிகராக உயர்ந்திருக்கிறார். இயக்குநர் பாண்டியன் இயக்கி வரும் "கால் டாக்சி', அருணை பாலா இயக்கத்தில் உருவாகி வரும் "அட்லி', ஏ.ஆர். முருகதாஸ் உதவியாளர் இயக்கும் படம் என அடுத்தடுத்து பரபரப்பாக இயங்கி வருகிறார். ""சினிமாக்காரனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா... இல்லை வெறுமென நடிப்பா... என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும். மனசு முழுக்க சினிமா கனவோடு அம்பாசமுத்திரத்தில் இருந்து சென்னை வந்ததும், நான் போய் நின்ற இடம் டி.பி.கஜேந்திரன் சார் அலுவலகம். அவர்தான் என்னைப் புரிந்து கொண்டு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் சினிமாவிலேயே பயணிக்க வேண்டும் என்று அரவணைத்தார்.
பெரும் கனவு, லட்சியம் என கோடம்பாக்கத்தில் ஓடி உழைத்த நாள்கள் நினைவில் நிழலாடுகின்றன. கனவு தேடி அலைந்த எல்லா இடங்களிலும் சின்ன சின்ன தோல்விகள். இப்போதுதான் வாய்ப்புகள் கனிகின்றன. ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைக்கிறேன். சினிமா தவிர எதையும் தேடிப் பிடிக்க மனசு இல்லை. சமூகச் சூழல்களின் துரத்தல் ஒரு புறம். சிதைந்து விடாத சினிமா கனவு ஒரு புறம். இந்த இரண்டுக்குமான போராட்டங்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அதை வாழ்ந்துப் பார்த்தால்தான் தெரியும். இத்தனை வருட போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் இருக்கை கொடுத்திருக்கிறது காலம். நிச்சயம் மதிப்புமிக்க இடத்துக்கு வருவேன் என்ற நம்பிக்கையில் உழைக்கிறேன்'' என்றார் நிமல்.