ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான ஒரு நாள் போட்டி, சிட்னியில் நடைபெற்றது. கரோனா காலத்திலும் இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது மைதானத்தில் விநோதமான நிகழ்வு நடைபெற்றது.
போட்டியை காண வந்த இந்திய ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலியா பெண்ணிடம் வித்தியாசமாக காதலை தெரிவித்தார். கூட்டத்திற்கு மத்தியில் தனது காதலை கூறியதால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், முதலில் அமைதியாக இருந்தார். தொடர்ந்து சிறிது யோசனைக்கு பிறகு இந்திய ரசிகரின் காதலை ஏற்றுக்கொண்டார் ஆஸ்திரேலியா நாட்டு கிரிக்கெட் ரசிகை. இந்த நிகழ்வை கிரிக்கெட் வீரர்களும் ரசித்தனர்.
பின்னர் இருவரும் முத்தம் கொடுத்து தங்களின் அன்பை பகிர்ந்து கொண்டனர். அவர்களை சுற்றியிருந்த இதர ரசிகர்கள், அவர்களை வாழ்த்தினார்கள். இந்த சம்பவத்தை பார்த்த ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல், காதல் ஜோடிகளை பார்த்து கைதட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்த விடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. கிரிக்கெட் போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்த பாக்ஸ் கிரிக்கெட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடியோவை பகிர்ந்துள்ளது.