இயக்குநராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி என இந்தப் பட்டியல் நீளமானது. அந்த வரிசையில் இப்போது "குட்டிப்புலி' புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் "தண்டாயுதபாணி' படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் சரவண சக்தி. அதன் பின் ஜே.கே. ரித்திஷ் நடித்த "நாயகன்' படத்தையும் இயக்கி வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் தன்னைத் தேடி வந்த சில வாய்ப்புகளில் நடிக்கத் தொடங்கினார். "குட்டிப்புலி' படத்தில் இவரது நடிப்புக்கு பரவலான வரவேற்பு இருந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக நடிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார். "மருது',"சண்டக்கோழி 2' ,"கொடிவீரன்", "தர்மதுரை' உள்ளிட்ட பல படங்களில் இவருக்கு பெயரைப் பெற்று தந்தன. இப்போது 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ் நடித்த" பில்லா பாண்டி' படத்தை இயக்கினார். சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் பட இயக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.