தினமணி கொண்டாட்டம்

தீபாவளி வரவு

20th Oct 2019 11:54 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகைக்கு வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம்... பட்டாசு, பலகாரம் போல் தீபாவளி படங்களுக்கும் தனித்துவம் உண்டு. விஜய் நடிக்கும் "பிகில்', கார்த்தியின் "கைதி' என இரண்டே படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாகவுள்ளன. இரண்டு படங்களின் "ஹைலைட்ஸ்' இதோ...!
 பிகில் ரகசியம்!

"தெறி', "மெர்சல்' படங்களைத் தொடர்ந்து, "பிகில்' படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைகிறது விஜய் - அட்லி கூட்டணி.
 இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வழக்கமாக படத்தை பிசினஸ் செய்யும் போது இந்த ஏரியாவை எவ்வளவுக்கு விற்க வேண்டும், அந்த ஏரியாவை எவ்வளவுக்கு விற்கலாம் என்று பெரிய பரபரப்பு இருக்கும். ஆனால், "பிகில்' படத்தில் அந்த டென்ஷன் இல்லை. பலபேர் போட்டி போட்டு, "நாங்க வாங்கிக்கிறோம்' என்று முன்வந்தார்கள். இதுவே எங்களுக்குப் பெரிய பெருமை என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.
 நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உண்டு.
 படத்தின் கதை கால்பந்து விளையாட்டை பற்றியது. கால்பந்தின் பரிச்சயம் இங்கே பெரிதாக இல்லாததால், அதை உணர்வூப்பூர்வமாக காட்ட வேண்டிய நிர்பந்தம் படக்குழுவுக்கு. இதற்காக ஹாலிவுட்டில் வெளிவந்த "பீலே' படத்தின் தொழில்நுட்பக் குழு இந்தப் படத்துக்காக பணியாற்றியுள்ளது.
 நயன்தாராவின் கதாபாத்திரமும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நயன்தாராவின் ஆடை வடிவமைப்பளாராக அனுவர்தன் பணியாற்றியுள்ளார்.
 ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு, "மெர்சல்' படத்தில் பணியாற்றிய கே.ஜி.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
 படத்தில் விஜய் - நயன்தாரா ஜோடி போல் இன்னொரு ஜோடி உண்டு. கதிருக்கு ஜோடியாக "ஜருகண்டி' படத்தில் நடித்த ரெபா மோனிகா நடிக்கிறார்.
 வழக்கமாக பல கதைகள் தயாரிப்பு தரப்பில் கேட்கப்பட்டது. அரசியல் சாயம் இல்லாத ஒரு படம் வேண்டும் என்பதுதான் ஏஜிஎஸ் தரப்பின் முக்கிய நிபந்தனை. அதற்கேற்ப "கில்லி', "போக்கிரி' மாதிரியான திரைக்கதை வடிவமைப்பு பற்றி பேசப்பட்டது. அப்போதுதான் இந்த கால்பந்து கதை பற்றி பேசப்பட்டது. இதுவரை விஜய் கால்பந்து வீரராக நடித்ததில்லை. அதுவே புதிது என்பதால் கதை வளர்ந்தது. அதுவில்லாமல் பெண்களை போற்றும் விதமான கதைக் கரு இதன் இன்னொரு சிறப்பு.
 நள்ளிரவு 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்தாலும், மறுநாள் காலையில 7 மணிக்கு வந்து கால்பந்து பயிற்சி எடுத்திருக்கிறார் விஜய். விளையாட்டு பற்றி கதை என்பதால் விஜய்க்கு திருப்தி இருந்தால் மட்டுமே, அந்த காட்சி தீர்மானமாக முடியும். இதற்காக நிறைய "ரீடேக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதை விட உணர்வுப்பூர்வமான காட்சிகளில் விஜய் வேறு விதமாக நடித்திருக்கிறார் என்கிறது படக்குழு.
 
 ஹீரோயின் இல்லாத கைதி!

ADVERTISEMENT

 "மாநகரம்' படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து "கைதி'யுடன் களம் இறங்குகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஓர் இரவு.. ஒரு காடு... ஒரு கைதி... இதுதான் இந்தப் படத்தின் பரபர ஒன் லைன்.
 தீபாவளி ரேஸில் முதல் ஆளாக இடம் பிடித்த "கைதி', ஹீரோயினே இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசஸருக்கு இணையத்தில் ஏக வரவேற்பு. அதே போல் படத்தின் ட்ரெய்லருக்கும் அமோக வரவேற்பு.
 நடிகர்களுக்கு ரிகர்சல் கொடுக்கிற மாதிரி, இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு, படத்தின் தொழில்நுட்ப குழுவுக்கு ஒருநாள் ரிகர்சல் நடந்துள்ளது. அதையும் ஒரு படப்பிடிப்பு மாதிரியே நடத்தி ஐந்து நிமிட அளவுக்கான வீடியோவாக எடுத்து, அதை எடிட் செய்து, அதற்குப் பின்னணி இசை சேர்த்து முழுமையான வீடியோவாக தயார் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு படப்பிடிப்புக்கு தயாராவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை என்கிறார்கள்.
 இந்த வீடியோ மூலமாக கதை எந்த எல்லைக்குள் பயணிக்கப் போகிறது என்ற மைண்ட் செட்டை படக்குழுவுக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
 "தீரன் அதிகாரம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் படத்துக்கு ஒளிப்பதிவு.
 கிடைக்கிற வெளிச்சத்திலேயே அழகான காட்சி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
 அதுமட்டுமின்றி, சண்டைக் காட்சிகளில் எல்லாக் காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடித்திருக்கிறார் கார்த்தி.
 பின்னணி இசையில் சாம் சி.எஸ்ஸும் படத்தொகுப்பில் பிலோமின் ராஜும் தன் பங்கை நேர்த்தியாக கொண்டு வந்துள்ளார்கள்.
 படப்பிடிப்பு முழுவதும் தென்மலை பகுதியில் நடந்துள்ளது. கடுமையான குளிரில்தான் படப்பிடிப்பு. குழுவில் எல்லோரும் கம்பளி போர்த்திக் கொண்டுதான் வேலை பார்த்திருக்கிறார்கள். கார்த்திக்கு காட்சிகளுக்கான ஆடை மட்டும்தான். அதனால் குளிரில் பயங்கரமாக சிரமப்பட்டுள்ளார்.
 -ஜி. அசோக்
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT