சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவு

 கதைக்குக் கதை தன்னை மெருக்கேற்றிக் கொள்கிறவர் கதிர்... இதில் எப்படி உருவெடுத்திருக்கிறார்....?
சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவு

"ஆக்ஷன் படம் என்றாலும், துடித்து அலற வைக்கிற ஆக்ஷன் இல்லை. எல்லாமே கதையோடு சம்பந்தப்பட்டுத்தான் இருக்கும். கதிருக்கு ஒரு கேûஸ விசாரிக்கிற வேலை வருகிறது. அது சுற்றிச் சுற்றி அவர் குடும்பம் வரைக்கும் போய் நிற்கிற மாதிரி பாதிப்பு வந்து விடுகிறது. கதையைமீறி கதிர் எதையும் செய்யமாட்டார். ஒரு மெலிதான லைன்தான் கதை. ஒளிப்பவாளர் மகேஷ் முத்துசாமிதான் முதல் ரசிகர். அவர்தான் தயாரிப்பாளர் ரகுகுமார் சாரிடம் கதையைக் கொண்டு போய்ச் சேர்த்தார். படித்துப் பார்த்தவர் " நல்லா வரும் போலிருக்கே! பெரிசா பண்ணிடுங்க' என்று பச்சைக்கொடிகாட்டினார். அப்படி வந்து நின்றதுதான் இந்த "சத்ரு'. எப்படிப் படமாக்க வேண்டும் என நினைத்தேனோ,அப்படியே திரையிலும் வந்திருக்கு''. - என ஆர்வமுடன் பேசுகிறார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டன். ராதாமோகனின் உதவியாளார். இது இவருக்கு முதல் படம்.
 கதைக்குக் கதை தன்னை மெருக்கேற்றிக் கொள்கிறவர் கதிர்... இதில் எப்படி உருவெடுத்திருக்கிறார்....?
 சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனால் தினமும் வீடு, அலுவலகம், வேலை, பிள்ளைகள் என அவ்வளவுதான் அனுபவம். ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை.
 ஒரு வழக்கோடு பல வருடங்கள் பயணிக்க வேண்டி வரும். அவர்கள் சந்திக்கின்ற மனிதர்கள், சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சில வழக்குகள்ரொம்பவும் விசித்திரமாக, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அப்படி ஒரு சூழலில் இயங்குவதே சிரமமானது. உயர் அதிகாரிகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு, மக்கள் பணியாற்ற வேண்டிய சிக்கல் என எல்லாமே அழுத்தும். இது ஒரே ஒரு போலீஸ் அதிகாரியின் கதையும் கிடையாது. பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு. அதை சினிமா என்ற வியாபார சமரசங்களுக்கு உட்பட்டுச் செய்திருக்கிறேன். அதே சமயத்தில் சமூகத்தின்பால் காவல்துறைக்கு இருக்க வேண்டிய நிறைய நிறைய கவனிப்புகள் படத்தில் வரும். கதை அனுமதிக்கிற,பொருந்துகிற அளவுக்குத்தான் ஆக்ஷன்.
 இது கதிரை இன்னும் வேறு தளத்திற்குக் கொண்டு போகிற படம். "சத்ரு' வெறும் ஆக்ஷன் மட்டும் கிடையாது.
 கோபம், பாசம், அழுகை, வெறி, கெத்து எல்லாம் சேர்ந்த மாஸ் படம்...
 அனைத்து அம்சங்களும் ஓ.கே... ரசிகர்களிடம் கதை பேசப் போவது என்ன...?
 இந்திய காவல்துறையில் பணியாற்றும் ஒருவன், பொது மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறான், அதிகார மையங்கள் அவனை எப்படியெல்லாம் கேவலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது வரை தீவிரமாக யோசித்து திரைக்கதை எழுதியிருக்கிறேன். உண்மையில், ரத்தம் வழிய வழிய.. நான்கு பேர் அடித்துக் கொள்ளும் போது ஒதுங்கி ஒளியும் போலீஸ்காரர்கள் எப்படி உருவாகிறார்கள். சாலைகளிலும் கடைகளிலும் அனுதினம் பார்க்க நேரிடும் போலீஸ்காரர்களைக் கேவலமாக திட்டும் நமக்கு, பெரும் அரசியல் பேரங்களிலும் கலவரங்களிலும் கொலைகளிலும் பங்கு போட்டு நடத்தும் காவல் அதிகாரிகளைத் தெரிவதே இல்லை. குற்றங்கள்தான் இந்தக் கதையின் பிரதானம். குற்றவாளிகளின் உருவாக்கம் தொடங்கி, அதன் சம்பவங்கள் வரை எல்லாமே இதில் இருக்கும். இறுதி வரை அவிழ்க்க முடியாத முடிச்சு திரைக்கதையில் தொடர்ந்து வரும். போலீஸ் கதைகளில் 100க்கு 80 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. அதை ரிப்பீட் செய்ததில் சிலப் படங்கள் தோற்றிருக்கலாம். திரைக்கதை எழுதும் போதே, சேகரித்த கதைகளே எக்கச்சக்கம் இருக்கும். நானே போலீஸ் ஸ்டோரியில் புதிதாக பத்துக் கதை இயக்க முடியும். ஒரு ஆளை நாம் சந்திக்க மட்டும்தான் செய்வோம்.
 போலீஸ் அந்த ஆளை ஊடுருவிப் பார்க்கும். கண்காணிக்கும். விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்கும்.
 விட்டுத்தான் பிடிக்கும். நிச்சயம் சத்ரு நீங்கள் பார்த்த படம் மாதிரி இருக்காது...
 கதையின் உள்ளடக்கம் பற்றி...
 ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம்.
 ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை கமர்ஷியல் சினிமாவுக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அது ஓர் உண்மை சம்பவம். எதார்த்தம் என்பது கற்பனையைக் காட்டிலும் விநோதமானது. அது மாதிரியான ஒரு சம்பவம் அது. இது மாதிரி நடக்குமா என்று கூட தோன்றியது.
 அதைப் பின் தொடர்ந்து போய்ப் பார்த்தால், உலகம் நெடுகிலும் அந்தப் பிரச்னை நடந்துக் கொண்டே இருப்பதாகத் தெரிந்தது. கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்பப் புள்ளி. பிளாக் காமெடியாக எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள்.
 அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம்தான். இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
 சிருஷ்டி டாங்கே... என்ன ஸ்பெஷல்...?
 கதையைக் கேட்டதும் சிருஷ்டி சம்மதம் சொல்லி விட்டார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையல்ல. சொல்லப் போனால், பாடலே கிடையாது. அவரின் சம்மதம் எனக்கு பெரிய ப்ளஸ். இது மாதிரி ஒரு கதையில் நடிக்க ஹீரோயின்கள் தயங்குவார்கள். சிருஷ்டி அப்படி இருந்ததில் ஒன்றும் ஆச்சரியம் கிடையாது. ஏற்கெனவே தன் தனித்திறமையை நிரூபித்த படங்கள் அவரின் கேரியரில் இருக்கிறது. படத்தில் சிருஷ்டிக்கு அருமையான ரோல். நடித்துக் கொண்டு இருக்கும்போதே அவர் அதை உணர்ந்ததுதான் விசேஷமானது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு இந்தப் படத்தின் பெரும் பேசும் பொருளாக இருக்கும். "உறியடி', "ராட்சசன்' படத்துக்கு ஸ்டண்ட் அமைத்த விக்கிதான் இந்தப் படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டர். அவரின் தனித்துவம் இன்னும் இதில் வெளிப்பட்டு வந்திருக்கிறது.
 - ஜி.அசோக்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com