கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பூவே போகாதே'. தருண் தேஜ், லாவண்யா, கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் நவீன் நயனி. படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... "1980-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
காதல்தான் இதன் களம். ஒரு சம்பவம்... ஆராய்ந்து பார்த்தால் இது மாதிரி நடக்குமா என்று கூட தோன்றியது.அதை பின் தொடர்ந்து போய் பார்த்தால், உலகம் நெடுகிலும் அந்தப் பிரச்னை நடந்து கொண்டே இருப்பதாகத் தெரிந்தது. கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்பப் புள்ளி. பிளாக் காமெடியாக எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள்.அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான பயணம்தான் இது. அந்தக் காலகட்டத்தில் காதலை இந்தச் சமூகம் எப்படிப் பார்த்தது என்பதை அழுத்தமாகப் பதிவிட்டுள்ளோம்'' என்றார் இயக்குநர்.