கின்னஸ் சாதனை முயற்சிக்காக சென்னையில் 100 அடி தோசை உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஐஐடி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், சரவணபவனை சேர்ந்த 50 சமையல் கலைஞர்கள் சேர்ந்து 100 அடி நீளத்திற்கு தோசையினைச் சுட்டு கின்னஸ் சாதனையினை படைத்திருக்கிறார்கள். இது குறித்து தலைமை சமையல் கலைஞர் வினோத் கூறியது:
""உலகிலேயே முதல் முறையாக, 50 சமையல் கலைஞர்கள் இணைந்து 100 அடி நீளத்தில் மிகப் பிரமாண்டமான தோசையை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தயாரித்தோம்.
இந்த நிகழ்விற்கு ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டை சேர்ந்தவர்கள் விருது அளித்துள்ளனர். இதற்குமுன் ஆமதாபாத்தில் உள்ள "ஸங்கல்ப் ஹோட்டல்' தயாரித்த 54 அடி நீள தோசையே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இந்த 100 அடி நீள தோசை தயாரிக்கப்பட்டது.
இதற்காகவே 105 அடி நீளமும் 7 டன் எடை கொண்ட தோசை கல் தயாரிக்கப்பட்டது. அதில் 10 கிலோ மாவில் 27 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான 100 அடி நீளத்திற்கு தோசை தயாரிக்கப்பட்டது. சரவணபவனை சேர்ந்த 50 சமையல் கலைஞர்கள் இணைந்து இதனை தயாரித்திருக்கிறோம்'' என்றார்.