பரதராமி... இது தமிழகத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும். ஆடு,மாடு, கோழிகள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் வாரச் சந்தை கூடுவது வழக்கம். இதே போல் விவசாய பொருள்களும் விற்பனைக்கு வரும். காய், கனி, கீரைகள், தானிய வகைகள் என இந்தச் சந்தை களைக் கட்டும். இந்த வாரச் சந்தையின் போது பரதராமி சுற்றுப்புற கிராம, நகர மக்கள் வருகை தந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இந்தச் சந்தையைப்பற்றி கேள்விப்பட்ட ஆறுபடையப்பா ஸ்க்ரீன்ஸ் படக்குழுவினர் இந்தச் சந்தையின் பின்னணியில் "தாம்பூலம்' படத்துக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இப்படத்தை இயக்குகிறார் பாரதிராமன். ஹீமா பிந்து, ரஷ்மி, வர்ணிகா என மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகின்றனர், ஹீமா பிந்து முறைப்படி கராத்தே கற்றவர், ரஷ்மி மாடலிங், வர்ணிகா நடனம் கற்றவர், நாயகர்களின் ஒருவரான சச்சின்புரோகித். இவர் ஏற்கெனவே கன்னடப் படங்களில் நடித்தவர்.
ஸ்ரீனிவாசன், காந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குடும்ப வாழ்வின் மகத்துவத்தைச் சொல்லும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு இளைஞர்கள் குறிக்கோள் எதுவுமின்றி தான் தோன்றித் தனமாகச் சுற்றி வருகின்றனர். இவர்களால் ஓர் இளம் பெண் பாதிக்கப்படுகிறாள். அந்தச் சம்பவம் இவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. அதன் பின் நடந்தது என்ன என்பதே கதை. பூங்கோதை தயாரிக்கிறார். பரதராமி, வேலூர், ஏலகிரி, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.