"ராஜாஜியின் திக்கற்ற பார்வதி' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதி புகழ் பெற்றவர் காரைக்குடி நாராயணன். தயாரிப்பு, இயக்கம், வசனங்கள் என எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நபர். "அச்சாணி', "தீர்க்கசுமங்கலி' , "மீனாட்சி குங்குமம்' போன்ற தமிழ் குடும்பச் சூழல்கள் சார்ந்த படங்களைத் தந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் " எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே' . படம் குறித்து பேசும் போது... ""காவல்துறையும் பத்திரிகைத்துறையும் நாட்டின் இரு கண்கள். இவை இரண்டும் சரியாக இருக்க வேண்டும். இல்லாவிடில் நீதிக்கண் குருடாகி விடும். இது முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள். இதுதான் இந்தக் கதையின் கரு.
பொது மக்களிடம் இருந்து விலகி நிற்கிற காவல்துறையும், பத்திரிகையும் இங்கே எந்தச் சாதனையையும் நிகழ்த்தி விட முடியாது. உண்மையில் தியாகராய நகர் சாலையோர கடைகளில் நிற்கும் போலீஸ்காரர்களை யார் உருவாக்குகிறார்கள். காக்கி சட்டையோடு அண்ணா மேம்பாலத்தில் கால் கடுக்க நின்றிருக்கும் பெண் காவலர் ஒருவர், போலீஸ் வேலை கிடைத்தத் தருணத்தில் என்னென்ன நினைத்திருப்பார். போலீஸ்காரர்களில் அற்புதமானவர்களையும் பார்த்திருக்கலாம். ஆனால், இங்கே நிறையப் பேருடைய மனிதத்தை அதிகாரமும், அரசியலும் தின்று விடுகின்றன. அரசியலும், சாதியும், பணமும் காவல் துறையை இயக்கிக் கொண்டு இருக்கிற வரை உன்னதமான பாதுகாப்பை நம்மால் உணரவே முடியாது. அது போல் பத்திரிகையாளர்கள் எல்லாப் பொழுதுகளையுமே, இந்தச் சமூகத்துடனும் சமூகத்துக்காவுமே பகிர்ந்து கொள்கிறார்கள். வரலாறுகளை அவர்கள்தான் உருவாக்குகிறார்கள். அவர்கள் ஒரு போதும் வரலாறு ஆவதில்லை. அனைத்துக்குமே இந்த இரு துறைகளுமே சாட்சி. இப்படிப் பல விஷயங்கள் மீது பொது விவாதங்களை எழுப்புவதாக இருக்கும் இந்தக் கதை. 70 காட்சிகளும் காமெடிதான். ஆனால், அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு விஷயமும் உங்களை எங்கேயோ இழுத்துப் பிடிக்கும்'' என்றார்.