தினமணி கதிர்

சத்யஜித் ரேவின் நான்கு கதைகள் !

டெல்டா அசோக்

சத்யஜித் ரே நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்ட கலைஞன். இந்திய சினிமாவுக்கு முகவரி தந்த இயக்குநர் என்பதைத் தாண்டி, இசை அமைத்திருக்கிறார். கட்டுரைகள், பாடல் வரிகள் எழுதியிருக்கிறார்.

ஓவியராக போஸ்டர் வடிவமைப்பாளராகக் கூட இருந்திருக்கிறார், விமர்சகராகவும் இருந்திருக்கிறார்.

கூடவே நிறையச் சிறுகதைகள், தொடர் கதைகள் எழுதியிருக்கிறார். அவரின் தொடர் கதைகளில் வரும் டிடெக்டிவ் ஃபெலுடா, பேராசிரியர் ஷோங்கு போன்ற பாத்திரங்கள் பலரின் ஃபேவரைட்! தற்போது நெட்ஃப்ளிக்ஸ் அவரின் நான்கு சிறுகதைகளை எடுத்து, ஒவ்வொரு மணி நேரத்துக்கு நீளும் நான்கு எபிசோடுகளாக, ஒரு ஆந்தாலஜி சிரீஸாக 'ரே' என்ற தொடரை வெளியிட்டுள்ளது.

பாலிவுட், பெங்காலி சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான மனோஜ் பாஜ்பாய், கஜராஜ் ராவ், கே.கே.மேனன், ஹர்ஷவர்தன் கபூர், அலி ஃபசல், ஷ்வேதா பாஸூ பிரசாத், அனிந்திதா போஸ், பிடிதா பாக் என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. இயக்குநர் முகர்ஜி இரண்டு எபிசோடுகளை இயக்க, இயக்குநர்கள் அபிஷேக் செளபே, மற்றும் வாசன் பாலா ஆகியோர் தலா ஒரு எபிசோடை இயக்கியுள்ளனர்.

முதல் கதை

இப்ஸித் ராம நாயர் ஒரு முன்னணி பிசினஸ்மேன். நண்பர்கள், பிசினஸ் வட்டாரத்தில் 'மனித கம்ப்யூட்டர்' எனப் புகழப்படும் அளவுக்கு எல்லாத் தகவல்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும் மனிதர். ஒருவரின் பிறந்த தேதி, அக்கவுன்ட் நம்பர் தொடங்கி எங்கே எப்போது யாரைச் சந்தித்தோம்,

அடுத்து என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் தன்னுள் டேட்டாவாகப் புதைத்து வைத்திருக்கும் மனிதர். அதுதான் அவரின் சீக்ரட் ஆஃப் சக்சஸாகவும் இருக்கிறது. இப்படி உலவும் மனிதர் தன்னுடைய வாழ்நாளில் நடந்த முக்கியமானதொரு நிகழ்வை மறந்துவிட்டார் என்றால் அது அவரின் மனநிலையை எவ்வாறு பாதிக்கும்? மெமரி லாஸ் வந்தவராய், தன் சுயத்தை இழக்கிறார், நிலைதடுமாறுகிறார், பிசினஸிலும் சொதப்புகிறார்.

தன் கட்டுப்பாடின்றி காரியங்கள் செய்கிறார். அவர் நிஜமாகவே அந்த நிகழ்வை மறந்துவிட்டாரா? இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டாரா? ஒரு சுவாரஸ்யமான சைக்காலஜிக்கல் த்ரில்லராக விரிகிறது இந்தக் கதை. எப்படிப்பட்ட பிரச்னைகளையும் சமாளிக்கும் அந்த பிசினஸ் மூளை, தனிப்பட்ட ஒரு விஷயத்தில் சிக்கித் தவிக்கையில் அந்தப் போராட்டத்தைப் பரிதாபப்படும் வகையில் வெளிப்படுத்தியிருக்கிறார். ரே எழுதிய பிரபலமான கதைகளில் ஒன்றான இதன் சாராம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு கதையைத் தற்போதைய உலகுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இருக்கின்றனர்.

இரண்டாம் கதை

40களில் இருக்கும் இந்திரசிஷ் ஷாவுக்கு எதிலுமே தோல்வி முகம். வீட்டு வாடகைக் கொடுக்கப் பணமில்லை, வேலையிலும் நாட்டமில்லை. போராட்டம் நிறைந்த வாழ்வில், தன்னுடைய பாட்டியின் இறப்புக்குப் பின்னர், பூர்விக சொத்தில் ஒரு பெரும்பங்கு இவருக்கு வந்து சேருகிறது. கூடவே உலகத் தரம் வாய்ந்த ஒப்பனை எப்படிப் போடுவது என்ற ரகசியக் குறிப்புகள் அடங்கிய அவரின் பாட்டியின் புத்தகமும் இவரை வந்தடைகிறது. அதன்படி, மேக்கப் போட்டால் மொத்தமாக ஒருவரை அடையாளமே தெரியாமல் மாற்றலாம், வேறொருவரைப் போலவும் தன்னை மாற்றிக் கொள்ளலாம். இயல்பாகவே மேக்கப் ஆர்ட்டிஸ்டான இந்திரசிஷ், இந்தத் தந்திரத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களைப் பழிவாங்கும் படலத்தைத் தொடங்குகிறார். தனக்கு இதுவரை எதுவும் செய்யாத கடவுளை ஒதுக்கிவைத்துவிட்டு, தன்னையே கடவுளாக நினைத்துக் கொள்கிறார். இது எதில் போய் முடிந்தது?

மூன்றாம் கதை

பாடகர், கவிஞர் முசாபிர் அலியும், மல்யுத்தம் குறித்து எழுதும் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் அஸ்லாம் பைகும் ஓர் ரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். கண்ணில் பட்டதை திருட நினைக்கும் நோயால் பாதிக்கப்பட்டவரான முசாபிர் அலி, 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே அஸ்லாம் பைகுவிடம், இதே போன்றதொரு ரயில் பயணத்தில் ஒரு பாக்கெட் கடிகாரத்தைத் திருடியதை நினைவுகூர்கிறார்.

தற்போது மாபெரும் பாடகராகிவிட்ட முசாபிர், துணிந்து தான் எப்போதோ செய்த தவற்றை ஒப்புக்கொண்டாரா?, கணக்கை நேர் செய்தாரா?, இந்த ஆந்தாலஜியிலேயே எளிமையான கதை என்றால் இதுவாகத்தான் இருக்கும்.

முசாபிர் அலியாக மனோஜ் பாஜ்பாய், அஸ்லாம் பைகுவாக கஜ ராஜ் ராவ் என இரண்டு தேர்ந்த நடிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருக்கின்றனர். கதை மொத்தமும் இவர்களே பிரதானம் என்பதால், இருவருக்குமே நடிப்புத் திறனை வெளிப்படுத்த நிறையவே வாய்ப்பு இருந்திருக்கிறது. ஒரு 20 நிமிட குறும்படமாக எடுத்து முடித்திருக்க வேண்டிய கதையை ஒரு மணிநேரத்துக்கு நீட்டி முழக்கியிருக்கிறார்கள். அதிலும் இறுதியில் வரும் அந்த அடகுக் கடை கிளைமேக்ஸ் எதற்கோ உவமையாகச் சொல்லப்பட்டு, அது செட்டாகாமல் தனித்து நிற்கிறது.

நான்காம் கதை

கண்களைச் சுருக்கிக் கொண்டு நோட்டமிடும் ஒரேயொரு மேஜிக்கல் லுக்கை வைத்தே ஒரே இரவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆகிறார் விக் என்கிற விக்ரம் அரோரா. ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் அவரின் அடுத்த பட ஷூட்டிங் நடக்க, அங்கே புகழ் பெற்ற பாடகி மடோனா தங்கிய அறை வேண்டும் என அடம்பிடித்துத் தேர்ந்தெடுக்கிறார் விக்.

ஆனால், அங்கே தங்க வரும் புகழ்பெற்ற பெண் சாமியாரான 'திதி'யும் அதே அறையையே தேர்ந்தெடுக்க, விக்கும் அவரின் நண்பரும் வேறொரு அறைக்கு மாற்றப்படுகின்றனர். பாலிவுட் ஸ்டார் என்பதால் அதுவரை அவருக்கு அந்த ஹோட்டலில் கிடைத்து வந்த மரியாதை, திதி வந்ததும் அவர் பக்கம் சாய்ந்து விடுகிறது. தான் இழந்த முதல் மரியாதையை மீட்கப் போராடுகிறார் விக்.

இறுதியில் அவர் திதியை வென்றாரா?, நான் பெரியவனா?, நீ பெரியவனா? என ஒரு பெண் ஆன்மிகவாதியிடம் மோதும் சினிமா ஸ்டார் என்பதுதான் ஒன்லைன். புகழின் உச்சியில் இருக்கும் இருவரையும் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதாகத் தொடங்கும் கதை, பின்னர் தடம்மாறி வேறொரு பாதைக்குச் சென்று, இறுதியில் திக்கற்று நிற்கிறது.'சினிமா வந்து 100 ஆண்டுதான் ஆச்சு.

ஆனா இங்க மதம் வந்து 10,000 வருஷமாச்சு!' என்ற ஒற்றை வசனம் கதை முழுவதையும் சொல்லிவிடுகிறது. ஆனால், கதை ஒரு பலமான கிளைமேக்ஸை எட்டிய பின்னரும் இரண்டாம் பாகம்போல ஃபேன்டஸி கணக்காகத் தொடர்ந்து நீள்வது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாகவே இந்த ஆந்தாலஜி சினிமாவின் பிரச்னை என்னவென்றால், மக்கள் அதில் எந்தக் கதை நன்றாக இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்துகொண்டு அந்தப் பக்கம் ஒதுங்கிவிடுவார்கள். அதே பிரச்னை 'ரே'வுக்கும் நிகழ வாய்ப்பிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

SCROLL FOR NEXT