குப்பையில் இருந்து நெகிழிகளை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இதற்கு புதிய தொழில்நுட்பத்தை சிவகாசியைச் சேர்ந்த மாணவிகள் 4 பேர் கண்டறிந்துள்ளனர்.
நெகிழி உலக மக்களின் வாழ்வில் ஒன்றாகிவிட்டது. குப்பையில் நெகிழி கழிவுகளைப் போடக் கூடாது என்றும் நெகிழிகளைத் தனியே பிரித்து வைத்து தூய்மைப் பணியாளர்களிடம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்திவருகிறது. இருப்பினும், பெரும்பாலானோர் இதை செய்வதில்லை.
வீடுகளில் அனைத்து குப்பையையும் ஒன்றாகத்தான் சேகரித்து வைக்கின்றனர். இவற்றை சேகரிக்கும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நெகிழி கழிவுகளை பிரிப்பது பெரிய சவால்தான்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மின்னியல், தொலைதொடர்பியல் துறை மாணவிகள் ஏ.நித்யாஸ்ரீ, ஐ.மெர்லின் எஸ்தர், பி.சந்தியா, ஜெ.பவித்ரா ஆகிய 4 மாணவிகள் குப்பையிலிருந்து நெகிழி கழிவுகளை தனியே பிரித்து எடுக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இதற்கு வழிகாட்டியாக உதவிப் பேராசிரியர் கருப்பசாமி செயல்பட்டார்.
இதுகுறித்து கல்லூரி தாளாளர் ஆர்.சோலைச்சாமி கூறியதாவது:
""குப்பையிலிருந்து நெகிழி கழிவுகளை பிரித்து எடுப்பது எப்படி என்பது குறித்து தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே போட்டியை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற அமைப்பு நடத்தியது. இரு கட்டமாக ஆன்லைனில் நடைபெற்றது.
மூன்றாவது கட்டமான இறுதிப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு உள்பட்ட தன்பாத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்பட்டது.
இதில், "செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலமாக நெகிழி கழிவுகளை குப்பையிலிருந்து பிரித்து எடுத்தல்' எனும் தலைப்பில் மாணவிகள் அளித்த செயல்திறன் மூன்றாவது இடத்தைப் பெற்றது.
இந்தத் துறையில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் அரிய சாதனைகளை செய்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு மூலம் கடினமான செயல்களை எளிதில் செய்ய வழிவகை செய்கிறது.
குப்பைகளில், கண்ணாடி கழிவுகள், மரக்கழிவுகள், உணவுக் கழிவுகள், நெகிழி கழிவுகள் உள்பட பல கழிவுகள் உள்ளன.
இதிலிருந்து நெகிழி கழிவுகளை இமேஜ் தொழில்நுட்பத்தைப் பயன்
படுத்தி, விடியோ காமிரா மூலம் பதிவு செய்யப்பட்டு, பின்பு அந்தப் பதிவானது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலமாக நெகிழி கழிவுகளை எளிதில் கண்டறிந்து , அவற்றை பிரித்து எடுக்க வழிவகை செய்கிறது.
இந்தச் செயல்திட்டம் குப்பைகளைப் பிரித்து எடுக்கும் இடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவக் கழிவுகளை பிரித்து எடுக்கும் இடங்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புக்கு அமைப்பின் இயக்குநர் பி.சௌம்யாசிங், நடுவர்கள் ஆர்.கே.குப்தா, கெமிலா சௌத்திரி ஆகியோர் மாணவிகளைப் பாராட்டினர்'' என்றார்.