அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த திருமுருக கிருபானந்த வாரியார் திடீரென எழுந்து, ""அருமையான நடிகரான ஆர்.எஸ்.மனோகர் பெருமைப்படத்தக்க முறையில் நடித்து நமது அன்பை எல்லாம் கொள்ளையடித்துவிட்டார். அவர் அருளும் பொருளும் பெற்று ஆஜானுபானுவாக வாழ நான் இரண்டே காலில் நின்று வாழ்த்துகிறேன்' என்று வாரியார் கூறினார். அப்போது மணி நள்ளிரவைத் தாண்டி, அதிகாலை 2.15 மணியைத் தொட்டது.
வாரியார் வாழ்த்தும்போது, எல்லோரும் கைக்கடிகாரத்தைப் பார்த்தனர். மணி சொல்லிவைத்தார்போன்று (2.15) இரண்டே கால் மணி.
வாரியார் சுவாமிகளும் இரண்டே கால்களுடன் நின்றுதான் மனோகரை வாழ்த்தினார் என்பது கூடுதல் சிறப்பு.
-ஆர்.கே.லிங்கேசன்
அன்பு என்னும் சாணத்தால் மனதை மெழுகுங்கள். அதில் நன்றி என்னும் சந்தனம் தெளித்து, கருணை விளக்கை ஏற்றி வையுங்கள். "மனித வடிவில் தெய்வம்' என்று உலகம் உங்களை புகழும்.
கோபம் வரும்போதெல்லாம் கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். அவலட்சணத்துடன் இருப்பதை காண்பீர்கள். உடனே கோபம் பறந்தோடிவிடும்.
தர்மவழியில் தேடிய பணம் பல தலைமுறைக்கும் தொடர்ந்து நற்பயன் தரும். பொய், சூழ்ச்சி, வஞ்சனையால் தேடிய பணம் வந்த வேகத்தில் காணாமல் போகும்.
வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. நல்லதை மட்டும் சிந்தியுங்கள். நல்லதை மட்டும் பேசுங்கள்.
- ந. பவன்குமார்