திருச்சிக்கு பேரறிஞர் அண்ணா வரும்பொதெல்லாம், தியாகராஜ பாகவதரைப் பார்க்காமல் போக மாட்டார். அது மட்டுமல்ல; அவரைப் பாடச் சொல்லி மெய் மறந்து கேட்டு ரசித்துவிட்டே திரும்புவார். இவ்வாறே காஞ்சிபுரத்துக்கு பாகவதர் சென்றாலும், அண்ணாவின் இல்லத்துக்குச் சென்று சந்தித்துவிட்டே திரும்புவார். நட்பு பலமாய் இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் பாகவதருக்கு என்று ஒரு கதை எழுதி, அவரை நடிக்கச் செய்ய வேண்டும் என்பது அண்ணாவின் ஆசை. அதுதான் "சொர்க்க வாசல்'. அந்தப் படத்தில் நாத்திகக் கொள்கை இருந்ததால், பாகவதர் நடிக்க மறுத்துவிட்டார்.
இந்தப் படத்தை "ஜூபிடர் பிக்சர்ஸ்' சோமசுந்தரம் செட்டியார், எஸ்.கே. மொய்தீன், ஓடத்துறை காளியப்ப கவுண்டர் ஆகியோர் சேர்ந்து "பரிமளம் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தில் உருவாக்கினர். கே.ஆர்.ராமசாமியும், பத்மினியும் நடித்தனர்.