துறையூரில் திருமண மண்டபம் ஒன்றில் மணமகள் அறையின் முன்பக்கச் சுவரில் காணப்பட்ட வாசகம்
அடம் பிடித்து மனதில் இடம் பிடித்தவள்!
வடம் பிடித்து தடம் பதித்தாள்
மடல் விரித்த புன்னகையுடன்-
மனையாள்
- துரை.ராமகிருஷ்ணன், எரகுடி.
சென்னையில் வாலாஜா சாலையில் சென்ற இரு ஆட்டோக்களில் எழுதியிருந்த வாசகம்:
""பாவங்களை தர்மமே வெல்லும்''.
""மனிதனே நீ மனிதனிடம் இரக்கம் காட்டினால் இறைவன் உன் மீது இரக்கம் காட்டுவான்''.
-இ.கி.ம.,
முகப்பேர்.
திருத்தங்கல் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் கண்ட வாசகம்:
மாணவர்கள் சிகை அலங்காரம் சரியாக செய்து வந்தால்தான் கையெழுத்து
-ஏ.எஸ்.ராஜேந்திரன்,
வெள்ளூர்.
நாகர்கோவில் பஜாரில் தம்பதிக்கு இடையே நடைபெற்ற உரையாடல்:
""என்னைத் தவிர எந்த நாயாவது உன்னை பெண் பார்க்க வந்திருக்குமா?''
ஏன் வரலை? உங்க அப்பாவும், அம்மாவும் வந்தாங்களே..?
-டி.மோகனதாஸ்,
காமராஜபுரம்.
தென்காசி பேருந்து நிலையம் அருகே இரு பெண்கள் பேசிக் கொண்டது:
""உன் மாமியார் எப்பவும் சிநேதிகிதிகளுடன் அரட்டை, மொபைல் போன் மூழ்கி இருக்காரா! அப்போ உன் பாடு?''
""சண்டை போட ஆள் இல்லாம திண்டாடிட்டு இருக்கேன்''
- கு.அருணாசலம்,
தென்காசி.
சிதம்பரம் கீழ ரத வீதியில் உள்ள டீக்கடையில் இரு இளைஞர்கள் பேசியது:
""மாப்ளே... என் பொறந்த நாளுக்கு சாக்லேட், கேக், ஐஸ் கிரீம் ... எல்லாம் வந்தும் எதையும் சாப்பிட முடியலே..''
ஏன்டா மச்சி.. சாப்பிட முடியலே..''
""எல்லாம் வாட்ஸ் ஆப்பில்தான் வந்தது மாப்ளே''
-அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.
நல்ல நண்பனைத் தேர்ந்தெடு!
நல்ல மக்களைப் பெற்றிடு!!
நல்லவனாய் வாழ்வில் வாழ்ந்திரு!!!
-தா.முருகேசன்,
திருத்துறைப்பூண்டி.
அந்த ஊரில் முக்கிய பிரமுகர் பெரியசாமி என்றொருவர் இருந்தார். அவர் யார் கல்யாணத்துக்கும், துக்கத்துக்கும் செல்ல மாட்டார்.
மாறாக, சோஷியல் மீடியாவில் பதிவு செய்து, வாழ்த்துகளையோ, இரங்கலையோ தெரிவிப்பார்.
அவருடைய நண்பர்கள் முத்துவும், முனுசாமியும் பல முறை திட்டினார்கள்; சில நேரங்களில் கடிந்தும் கொண்டார்கள்.
"நாளைக்கு நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வர்றணும்னா... நம்ம நாலு நிகழ்ச்சிகளுக்கு போகணும்' என்று இருவரும் சொன்னால், பெரியசாமி சிரித்துகொண்டே சொல்வார்:
""நான் சோஷியல் மீடியாவுல பதிவு போடுறதே பெரிய விஷயம். நான் நேரில் வர்றதை விட, பதிவே பெரிய விஷயம்'' என்பார்பெரியசாமி.
நாள்கள் சென்றன. பெரியசாமி தன் மகன் திருமணத்துக்கு ஊரெல்லாம் அழைப்பு விடுத்தார். தடபுடலென ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் வந்தவர்களோ சொற்ப நபர்கள்தான்!
ஆனால், சோஷியல் மீடியாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட பதிவுகளும், வாழ்த்துகளும் இருந்தன.
பெரியசாமி சோகமாகி புலம்பித் தீர்த்தார். மொய் பணமும் தேறவில்லை.
-தி.நந்தகுமார்
நாளை நடக்க இன்றே செயல்படு.
நாள்களைக் கடத்தினால்
நின்றுவிடும் செயல்பாடு.
பத்மா சாரதி,
தஞ்சாவூர்.
தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆப் முதலிடம் வகிக்கிறது.
வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு புதிய சேவைகளை அந்த நிறுவனம் அவ்வப்போது தொடங்கி வருகிறது. தற்போது ஒரு குழுவில் 256 பேரை மட்டும் சேர்க்க முடியும். இதை 512-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும், வாட்ஸ் ஆப்புக்கு போட்டியாக உள்ள டெலகிராம் செயலியில் சூப்பர் குழுவில் ஒரு லட்சம் பேர் வரை சேர்க்கலாம் எனும் போது, வாட்ஸ் ஆப் சேவை குறைவுதான்.
இதேபோல், வாட்ஸ் ஆப்பில் இருந்து பகிரும் ஃபைல்களின் அளவை 100 எம்.பி.யில் இருந்து 2 ஜி.பி.க்கு உயர்த்தி உள்ளது. இது வரவேற்கத்தக்கச் சேவையாகும்.
மற்றவர்களின் குறுந்தகவலுக்கு சேகை மூலம் பதிலளிக்க உதவும் பல்வேறு வகையிலான எமோஜிகளையும் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சேவைகள் பயன்பாட்டாளர்களை நிச்சயம் கவரும் என்றே எதிர்பார்க்கலாம்.
-அ.சர்ப்ராஸ்