இயக்குநர் பாபு யோகேஸ்வரன் "தாஸ்' படத்தின் மூலம் கோடம்பாக்கம் வந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பின் "தமிழரசன்' படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிக்கின்றனர். இளையராஜா இசை.
"தமிழரசன் என்கிற 40 வயதுக்காரருக்கு மனைவி, குழந்தை என சாமானிய வாழ்க்கை. நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வரும். எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்கிறோம். சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். அப்படி ஓர் இடம் இங்கே வந்து போகிறது. அதைக் கடக்கிற நேரத்தில் அவனுக்கு வந்து போகிற அனுபவங்கள்தான் முழுப் படமும். இதில் வருகிறஅழுத்தம் எல்லாத் திசைகளுக்கும் உங்களைக் கொண்டு போகும். நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்'' என்றார் இயக்குநர். இந்த மாதம் 26- ஆம் தேதி திரைக்குவருகிறது.
---------------------------------------------
எம். எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளு பேத்திகளான எஸ்.ஐஸ்வர்யா மற்றும் எஸ். செளந்தர்யாவும் பாடிய ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம் என்கிற இசை ஆல்பத்தை இளையராஜா வெளியிட்டார்.
விழாவில் இளையராஜா பேசும் போது... "சங்கீத உலகத்திலேயே மிகவும் உயர்ந்த பேரும் புகழும் பெற்ற எம்.எஸ்.அம்மா பாடிய வெங்கடேச சுப்ரபாதத்தை அவரது பரம்பரையைச் சேர்ந்த எம்.எஸ்.அம்மாவின் பேத்திகள் பாடியிருக்கிறார்கள்.
இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், எம்.எஸ். அம்மா பாடிய காலத்திலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை ஓர் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றிப் புகழ்ந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் இந்த தலைமுறைக்கு, எம்.எஸ்.அம்மாவின் பேத்திமார்கள் பாடியிருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக சங்கீதம் செல்ல வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இருப்பதாகத்தான் இதை நான் பார்க்கிறேன். வருங்கால சந்ததியினருக்கு சங்கீதத்தை நாம் கொடுக்காமல் நம் கையிலேயே எடுத்துக் கொண்டு போனால், இதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? அடுத்த தலைமுறைக்குச் சங்கீதத்தை எடுத்துச் செல்லும் அந்த பணியை செவ்வனே செய்து வரும் எம்.எஸ். அம்மாவின் பரம்பரைக்கு என்னுடைய வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்'' என்றார்.
---------------------------------------------
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான எல். ராமச்சந்திரன் பிரத்யேக முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையையும், அந்த கலையின் தனித்துவமான அடையாளங்களையும் ஆவணப்படுத்தும் வகையில் சர்வதேசத் தரத்துடன் புகைப்பட கோர்வையை உருவாக்கியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ""தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான தெருக்கூத்து கலையையும், கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் "தெருகூத்துக் கலைஞன்' என்ற பெயரில் ஓர் உன்னதமான பணியில் ஈடுபட திட்டமிட்டேன். இதுதொடர்பாக எனது நண்பரான விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டேன். அவர் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி கேட்டறிந்ததும், உடனடியாக என்னுடைய புகைப்பட பாணியிலான கலைப் படைப்பிற்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்தார்.
அவருக்கு இருக்கும் ஏராளமான பணிச்சுமையில் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சிறிதும் தாமதிக்காமல் நாள் காட்டிக்கான புகைப்பட படப்பிடிப்பிற்கு நேரம் ஒதுக்கினார். அத்துடன் பல மணி நேரம் நீடிக்கக் கூடிய தெருக்கூத்து கலைஞருக்கான ஒப்பனையை பொறுமையுடன் செய்து கொண்டு, இந்த கலைப் படைப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்'' என்றார்.
---------------------------------------------
"ஆர்ஆர்ஆர்' படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து முடித்துள்ளார் ராஜமெளலி. இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்தப் படம் "பாகுபலி'யை விட அதிக வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் முடிந்ததையடுத்து ராஜமெளலி அடுத்தது எந்த மாதிரியான படத்தை எடுப்பார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது ராஜமெளலி "மகாபாரதம்' கதையை மிகவும் பிரம்மாண்டமாக இயக்க இருக்கிறார். அடுத்த 10 மாதத்திற்குள் மகாபாரதத்தின் பணிகள் தொடங்கஇருக்கின்றன.
தற்போது ராஜமெளலி அடுத்ததாக இயக்க இருக்கும் "மகாபாரதம்', மணிரத்தினம் இயக்கும் "பொன்னியின் செல்வன்' பட்ஜெட்டை விட அதிக பொருட்செலவில் உருவாக
இருக்கிறது.
---------------------------------------------
ஜெய் பீம் படச் சர்ச்சையின் காரணமாக நடிகர் சூர்யா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன் காரணமாக அவர் கடந்த மாதம் தன் மனைவி ஜோதிகாவுடன் துபைக்கு சுற்றுலா சென்றார். அங்கு சிலநாள்கள் தங்கி பொழுதை கழித்த அவர்கள் இருவரும் சென்னை திரும்பும் வழியில் கேரளாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர் ஜோதிகாவுடன் கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வது போன்ற விடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வந்தது. கேரளாவில் சில நாள்கள் தங்கியிருந்த சூர்யா அங்கு பிரபலமான களரிசண்டையை ஆர்வத்துடன் கவனித்துள்ளார்.
சுமார் 2 மணி நேரம் சூர்யாவும்,ஜோதிகாவும் அந்த வித்தையைக் கவனித்துள்ளனர். மேலும் அந்த களரி வித்தையின் சில நுணுக்கங்களையும் சூர்யா தெரிந்து கொண்டுள்ளார். அவர் தற்போது "எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகஇருக்கிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா "வாடிவாசல்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். இது ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதையாக உருவாக இருக்கிறது.