கண்டது
(கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை வாயிலில் நின்ற ஆம்புலன்சில்)
தனித்திரு...விழித்திரு ...
மீறினால்...
வண்டியில் வர தயாராக இரு !
- ச.ஜான்ரவி,
கோவில்பட்டி.
(தூத்துக்குடியில் துணி வியாபாரம் செய்யும் நபரின் வேனின் பின்புறத்தில்)
துணியே துணை!
மு.சம்சுதீன் புஹாரி,
தூத்துக்குடி- 2.
(இரு சக்கர வாகனம் ஒன்றின் பின்புறத்தில்)
என்னுடைய "பல்சர்'
எந்த "ஸ்கூட்டி'யின்
பின்னாலும் போகாது.
அமுதா அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
(கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தெரு குழாய் அருகே இரு பெண்கள்)
""நீங்க வீட்டில் இருந்தாலும் "மாஸ்க்'போட்டு ட்டுத்தான் இருப்பீங்களோ?''
""ஏன் அப்படி கேட்கிறீங்க?''
""இல்லே...எங்க வீட்டில் எது சமைச்சாலும்சிக்கனா... மட்டனா'னு மோப்பம் பிடித்து கேட்பீங்களே...இப்ப கொஞ்ச நாளாய் அது பற்றி கேட்கற தில்லையே...அதான்!''
இலக்கியா மகேஷ்,
கோவை -62.
(தஞ்சாவூரில் மூடியிருக்கும்சலூன் கடை முன்வாடிக்கையாளரும் கடைக்காரரும்)
""என்னண்ணே... திடீர்ன்னு கடைப்பக்கம்?
""சரி... வந்தது வந்துட்டேன்... லைட்டா திறந்து ஷேவிங் பண்ணிவுட்ருங்களேன்''
""சரி வாங்க... 3500 ரூபா ஆகும் பரவாயில்லையா? லைட்டா திறந்தாலும் ஸ்ட்ராங்கா
அபராதம் போட்ருவாங்க தெரியுமில்லே?''
""அதுசரி... நான் இப்படியே பரதேசியாவே இருந்துடுறேன்... விட்டுடுங்க!''
பா. து. பிரகாஷ்,
தஞ்சாவூர்-1.
சிக்கலிலும்... சிக்னலிலும் சிறிது நேரம்
பொறுமையாகக் காத்திருந்தால் போதும்...
வழி தானாகக் கிடைத்துவிடும்.
அ.யாழினி பர்வதம்,
சென்னை-78.
முனியம்மாள் பாட்டி தன் பேரனுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி,
முதலில் ஓர் டம்ளரில்
தண்ணீர் உடன் பேரனுக்கு மாத்திரை கொடுத்தாள். "" பாட்டி... கசப்பா இருக்கு'' என்று சொல்லி, பேரன் மாத்திரையை விழுங்கவில்லை.
பின்பு ஒரு டம்ளர் பால் கொடுத்து கூடவே மாத்திரையையும் கொடுத்தாள். அதற்கும் முதலில் மாதிரியே பதில் வந்தது பேரனிடமிருந்து.
கடைசியாக முனியம்மாள் பாட்டிக்கு ஓர் யோசனை வந்தது. வாழைப்பழத்தின் உள்ளே மாத்திரையை மறைத்து வைத்து பேரனிடம் கொடுத்தாள்.
பின்பு, "" வாழைப்பழம் எப்படிடா இருந்தது?'' என்று கேட்டாள் பாட்டி.
""பழம் என்னவோ இனிப்பாதான் இருந்துச்சு. விதைதான் கசப்பா இருந்துச்சு. துப்பிட்டேன் பாட்டி'' என்றான் பேரன்.
எஸ்.சத்யா ரவி,
கம்பைநல்லூர்.
நட்பில் அன்று சிரித்துப் பழகியதை
நினைத்தால் இன்று அழுகை வரும்.
காதலில் அன்று அழுது மன்றாடியதை நினைத்தால்
இன்று சிரிப்பு வரும்.
அண்ணா அன்பழகன்,
அந்தணப்பேட்டை.
வேப்பங்குச்சி, கருவேலம் குச்சிகளில் பல்துலக்கிக் கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள். அதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான கேடும் ஏற்படவில்லை.
இப்போது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட டூத் பிரஷ்களைப் பயன்படுத்துகிறோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு பிரஷ்ஷைப் பயன்படுத்தினாலும், ஆண்டுக்கு 4 பிரஷ்களைப் பயன்படுத்தி அவற்றைத் தூக்கியெறிகிறோம். உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இவ்வாறு ஓர் ஆண்டில் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் டூத் பிரஷ்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், ஒவ்வோராண்டும் சுற்றுச்சூழலுக்கு நாம் எந்த அளவு கேடு செய்கிறோம் என்பது தெரிந்துவிடும்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும்விதமாக "ஸ்விட்ச்' என்ற பெயரில் ஒரு டூத் பிரஷ் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த டூத் பிரஷ் இரண்டு பகுதிகளாக உள்ளது. நாம் பல் துலக்கும் தலைப்பகுதி மற்றும் கையில் பிடிக்கும் ஹேண்டில். இதில் நாம் பயன்படுத்தும் பல்துலக்கும் தலைப்பகுதி தேய்ந்து பயன்படுத்தத் தகுதியில்லாமல் போகும்போது, அதன் தலைப்பகுதியை மட்டும் தனியே கழற்றிவிட்டு, புதிய தலைப்பகுதியைப் பொருத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நாம் பயன்படுத்தி தூக்கியெறியும் ஹேண்டில்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்துவிடும்.
இந்தத் தலைப்பகுதி தேய்ந்து போகும்போது தானே அதன் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும். உடனே வேறு தலைப்பகுதியை நாம் மாற்றிக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது, இந்த ஸ்விட்ச் டூத் பிரஷ் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதே.
என்.ஜே.,
சென்னை -58.