புற்றுநோயைக் கண்டுபிடிக்க உடலில் உள்ள திசுக்களை எடுத்து ஆய்வு செய்வது வழக்கமாக இருக்கிறது. பயாப்சி என்றழைக்கப்படும் இந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்க சில வாரங்கள் கூட ஆகிவிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனால் வலியும், செலவும் அதிகம். தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் எக்ஸீட்டரைச் சேர்ந்த ஆராய்ச்சி
யாளர்கள் ஒரு ஸ்மார்ட் ஊசியைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இதை ஒருவருடைய உடலில் செலுத்திய சில வினாடிகளில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா? என்பது தெரிந்துவிடும்.
உடலில் உள்ள நல்ல திசுக்களின் மீதும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களின் மீதும் ஒளி ஊடுருவும்போது ஏற்படும் ஒளிவிலகல் வேறுபட்டதாக இருக்கிறது. இந்த ஊசியை உடலில் செலுத்தும்போது பாய்ச்சப்படும் ஒளியின் ஒளிவிலகலின் அளவைக் கண்டறிந்து புற்றுநோய் ஒருவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை உடனே தெரிந்து கொள்ள முடியும்.