கரோனா தொற்றின் பாதிப்பு உலக அளவில் அதிகரித்துவிட்ட நிலையில், பலவிதங்களில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் முயற்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பல நாட்டு அரசுகளும் நேரடியான பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன. "கைக்கு கை மாறும் பணத்தால்' கரோனா தீநுண்மி பரவும் என்பதால் இணையவழி பரிமாற்றத்தை அரசுகள் வற்புறுத்துகின்றன. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டின் சுகாதார அமைச்சகம் நேரடியான பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துமாறு
மக்களைக் கேட்டுக் கொண்டது.
கென்யாவின் மியா நகரில் செல்லிடப்பேசி வழியாக பணப் பரிமாற்றம் செய்து தரும் பணியை மேற்கொண்டு வருபவர் டேன்சின் வன்ஜோஹி. ஒவ்வொரு நாளும் நிறையப் பணத்தைத் தொட வேண்டிய கட்டாயம்.
ஆனால் நேரடிப் பணப்புழக்கத்தை அவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதால், அவருடைய வேலை தொய்வில்லாமல் எப்போதும் நடந்து வந்தது. பயந்து கொண்டே பணத்தைத் தொட வேண்டிய நிலைமை. பணத்தை தூய்மையாக்கும் கருவி ஒன்றிருந்தால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடும் என்று அவர் நினைத்தார்.
அதனையொட்டி அவர் மரத்தாலான பணத்தைத் தூய்மைப்படுத்தும் கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கருவியில் மோட்டார், கியர், ரப்பர் சீட், சானிடைசர் ஆகியவை உள்ளன. ரூபாய் நோட்டைக் கருவியில் வைத்தால் அது மெதுவாக உள்ளே சென்று சானிடைசரால் தூய்மைப்படுத்தப்பட்டு கருவியின் இன்னொரு வழியாக வெளியே வந்துவிடுகிறது.
மிகவும் எளிமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்தக் கருவியில் ரூபாய் நோட்டுகளை மட்டுமல்ல, அடையாள அட்டைகளைக் கூட தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். அவருடைய இந்தக் கருவி கென்யா அரசின் கவனத்தை மட்டுமல்ல, உலகின் பலநாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.