திரைக்கதிர் 

தொடங்குமா.... தொடங்காதா என்ற சர்ச்சை காலங்களை கடந்து "இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. 
திரைக்கதிர் 

* தொடங்குமா.... தொடங்காதா என்ற சர்ச்சை காலங்களை கடந்து "இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. 
ஷங்கர் இயக்கத்தில் முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கிறார் காஜல் அகர்வால்.
சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பு 18 நாள்கள் வரை நடந்தது. அடுத்த கட்டப் படிப்பு ஆந்திர மாநிலத்தில் நடத்தப்படவுள்ளது. இதில் காஜல் ஏற்றுள்ள "வீரமங்கை' கதாபாத்திரத்துக்காக களரி பயிற்சி பெற்றுள்ள அவர், இப்போது குதிரை சவாரியும் கற்று வருகிறார். "கேரக்டருக்காக நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரியும். அதனால்தான் முழு ஈடுபாட்டுடன் களரி, குதிரை ஏற்றம் கற்றுக்கொள்கிறேன்.இனி என்னால் "இந்தியன் 2' படப்பிடிப்பில் பதற்றம் இல்லாமல் நடிக்க முடியும்'' என்ற அவர், ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே அவர் நடித்து தணிக்கையில் சிக்கியுள்ள "பாரீஸ் பாரீஸ்' படத்தில், குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதால், விரைவில் படம் திரைக்கு வருகிறது. தவிர, சிவா இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

* "நீங்கள் தொடர்ச்சியாக நடிக்க விரும்பும் மொழி ஹிந்தியா, தமிழா?'' என்ற கேள்விக்கு, "தமிழ்தான்... ஆனால் வாய்ப்புதான் இல்லை..... பாலிவுட்டில் நல்ல நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்று நடிக்கிறேன்'' என்று பேசியிருக்கிறார் டாப்ஸி. சமீபகாலமாக டாப்ஸிக்கு விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
கடந்த படம்தான் விளையாட்டு படம். அடுத்து நடிக்கும் படம் வேறு கதைக்களத்தில் இருக்க வேண்டும் என்ற கணக்கு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்து விளையாட்டு படக் கதைகளாக இருந்தாலும் நடிக்க சம்மதம் சொல்கிறார் டாப்ஸி. "சூர்மா' என்ற ஹிந்தி படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்த டாப்ஸி, அடுத்து "சாத் கி ஆங்க்' படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்தார். அடுத்து "ராஷ்மி ராக்கெட்' படத்தில் தடகள வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுதவிர, இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் திரையுலகில் வலம் வந்திருக்கிறது.

* முன்பை விட சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார் த்ரிஷா. இருந்தும், நயன்தாரா அளவுக்கு அவரால் ஹிட் கொடுக்க முடியவில்லை. காரணம், குறிப்பிடத்தகுந்த இயக்குநர்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதைப் பெரிய குறையாகக் கருதி வந்தார். இந்த நிலையில் அதற்கு கரம் கொடுத்திருக்கிறார் சரவணன். "எங்கேயும் எப்போதும்', "வலியவன்' படங்களை இயக்கியவர் சரவணன். அவர் இயக்கும் படத்தில் த்ரிஷா நடிக்கிறார். படத்துக்கு "ராங்கி' என தலைப்பிட்டுள்ளனர். இதில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகிறது. சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் படப்பிடிப்பு துவங்கியது. இதில் த்ரிஷா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க தேர்வாகியுள்ளார். இவர் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான "தண்ணீர் மதன் தினங்கள்' படத்தில் நடித்து புகழ் பெற்றவர். அப்பாவித்தனமான பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்து இருந்தார். "ராங்கி' மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார் அவர். 

* கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படத்தில் தனுஷ் நடிக்கிறார். "பேட்ட' படத்துக்கு முன் "இறைவி' படத்தை இயக்கி வந்த போதே, தனுஷ் படத்தை இயக்குவதற்காக ஒப்பந்தம் ஆனார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், திடீரென்று ரஜினியின் "பேட்ட' படத்தை இயக்க வேண்டிய சூழல் இருந்ததால், அந்த படம் தள்ளிப் போனது. இதனால் இந்த இருவரின் கூட்டணி இணையவில்லை. தற்போது இவர்கள் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 
சமீபத்தில் தனுஷ் படத்துக்கு உருவாக்கப்பட்ட கதையை மீண்டும் புதுமெருக்கேற்றியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இதுவொரு கேங்ஸ்டர் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது. முழு படப்பிடிப்பும் லண்டனில் நடக்கவுள்ளது. தற்போது இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மே முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இவர், "நார்னியா', "பிரேவ் ஹார்ட்', "டிரான்ஸ்போர்ட்டிங்' போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது. 
ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com