கேட்டது
(வேலூர் சின்ன அல்லாபுரம் பஸ் நிறுத்தத்தில் நடுத்தர வயதுடைய இருவர்)
""மச்சி... குடும்பத்துல ஒரே சண்டை. நிம்மதி இல்லை. உன்னை மாதிரி ஜாலியா இருக்க ஐடியா சொல்லேன்''
""ரொம்ப ஈஸி... குரங்குத் தத்துவத்தைப் பின்பற்று. மனைவியும் பசங்களும் பேசுறதைப் பார்க்காதே, மனைவி திட்டும்போது காதை மூடிக்கொள்... மனைவி என்ன பேசினாலும் எதிர்த்துப் பேசாதே... எல்லாம் சரியாயிடும்''
""போ மச்சி... இதெல்லாம் எங்க வீட்டுக்குச் சரிப்பட்டு வராது. நான் குரங்குத் தத்துவத்தைப் பின்பற்றினா என் மனைவி கொரில்லா தாக்குதல் நடத்துவா... இதுக்கு இப்ப மாதிரி இருக்குறதே பரவாயில்லை''
வெ.ராம்குமார், வேலூர்.
(நாகர்கோவில் செட்டிக்குளம் ஜங்ஷனில்
டூ வீலரில் நின்று கொண்டிருப்பவரும் ஒரு பெரியவரும்)
""தம்பி... தெற்கு ரோட்டுலயா போறே?''
""இல்ல வடக்கு ரோட்டுல போறேன்''
""நானும் கூட வரவா?''
""உங்களுக்கு தெற்கதானே போகணும்?''
""இல்லை வடக்கு ரோட்டுக்குத்தான் போகணும். யார்ட்ட போற இடத்தைச் சொல்லிக் கேட்டா இல்லை வேற ரோட்டுல போறேன்பாங்க. அதான் மாத்திக் கேட்டேன்''
மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை.
கண்டது
(திருப்பத்தூர் தலைமைத் தபால் நிலையம் அருகே ஒரு தேநீர் கடையின் பெயர்)
ஆபிஸர்ஸ் காபி பார்
பி.கோவிந்தசாமி, ஊத்தங்கரை.
(திருச்சி - மணப்பாறை செல்லும் சாலையில் சென்ற ஒரு லாரியின் பின்பக்கத்தில்)
உன்னை விட உயர்ந்தவன் யாருமில்லை;
அதனால் உன்னைத் தாழ்வாக நினைக்காதே!
உன்னைவிட தாழ்ந்தவனும் யாருமில்லை;
அதனால் யாரையும் ஏளனமாக நினைக்காதே!
ஆர்.தனம், திருச்சி-2
(விருதுநகரில் ஒரு கோச்சிங் சென்டரில்)
தோற்றவனுக்கு மறு ஜென்மம்
ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.
(கொடைக்கானலில் ஓர் ஓடையின் பெயர்)
மதிகெட்டான் ஓடை
செ.புகழேந்தி, அரக்கோணம்.
மைக்ரோ கதை
ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. தலைப்பு: "குடும்பத்தில் அதிக அன்பு செலுத்துவது, கணவனா? மனைவியா?'. பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர், ""நீ தான் அடுத்த பிறவியிலும் எனக்கு மனைவியாக இருக்க வேண்டும் என்று எத்தனை பேர் மனைவியிடம் கேட்பீர்கள்? அவர்கள் எல்லாரும் கையைத் தூக்குங்கள்'' என்றார்.
மனைவியுடன் பட்டிமன்றத்துக்கு வந்திருந்த கணேசன் உடனே கையைத் தூக்கினான். மனைவியை அழைத்து வராமல் தனியாக வந்து இருந்த கணேசனின் நண்பன் சேகரும் கையைத் தூக்கினான்.
கணேசன் சேகர் காதில் ரகசியமாகக் கிசுகிசுத்தான்.
""நான்தான் பொண்டாட்டி கூட வந்து இருக்கேன். வேறு வழியில்லாமல் கையைத் தூக்கினேன். நீ எதுக்குடா தூக்கினாய்?'' என்று கேட்டான்.
அதற்கு சேகர் சொன்னான்:
""ஏம்ப்பா... சரியான ஆளா இருக்கியே... நான் கை தூக்கலேன்னா உன் வொய்ஃப் என் வொய்ஃப் கிட்ட வீட்டுக்குப் போனதும் சொல்லிடுவாங்களே... மனுஷன் ஏதோ அரைகுறை நிம்மதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா?
மு.தனகோபாலன், திருவாரூர்.
எஸ்எம்எஸ்
புரிந்து கொண்டால்
கோபம் கூட அர்த்தமுள்ளதாய் தெரியும்.
புரியவில்லை என்றால்
அன்பு கூட அர்த்தமற்றதாய் தெரியும்.
க.அருச்சுனன், செங்கல்பட்டு.
அப்படீங்களா!
வெளியிடங்களுக்குச் செல்லும்போது சோபாவை, நாற்காலியை எல்லாம் கையோடு எடுத்துச் செல்ல முடியுமா? ஆனால் நாற்காலியில், சோபாவில் உட்காரும் வசதியைக் கையோடு எடுத்துச் செல்ல முடியும். ஆம். கஅஙழஅஇ என்றழைக்கப்படும் இந்த எடுத்துச் செல்லக் கூடிய உறைகளை ஊதினால், ஒரு சில நிமிடங்களுக்குள் சோபா தயாராகிவிடும்.
ஆறரை அடி நீளம், மூன்றடி அகலம், ஒன்றரை அடி உயரம் உள்ள இந்த சோபாவில் நீங்கள் படுத்துக் கொள்ளக் கூட முடியும். வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்றால், தூசி, அழுக்கு படிந்துவிடுமே என்று கவலைப்படத் தேவையில்லை. எளிதாகச் சுத்தம் செய்துவிடலாம். இதன் எடை ரொம்பவும் குறைவு. 1 கிலோ 700 கிராம்தான்.
என்.ஜே., சென்னை-58