""நான் சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு வரும்போது கம்பராமாயணப் புத்தகங்களில் நூறு பிரதி எடுத்து வந்தேன். கோலாலம்பூர் ரசிகர்கள், நான் முந்தி, நீ முந்தி என்று வாங்கினர். இரண்டே நாள்களில், 75 பிரதிகள் விற்பனையாகிவிட்டன. அத்துடன் விற்பனையை நிறுத்திக் கொள்ளச் சொல்லி
விட்டேன். பிறகு சிங்கப்பூருக்கு வந்திருக்கிறேன். எனக்கோ உள்ளூர பயம். கோலாலம்பூரை விட சிங்கப்பூரில் ரசிகர்கள் அதிகமாயிற்றே. தமிழன்பர்களுக்கு, 25 புத்தகங்கள் எப்படி போதும் என்றெல்லாம் எண்ணினேன். ஆனால், இரண்டாம் நாள் புத்தகம் விற்றுக் கொண்டிருப்பவரிடம், "எத்தனை புத்தகங்கள் விற்பனையாயின?' என்று விசாரித்தேன். அவர், "இதுவரை ஐந்து புத்தகங்கள்தான் விற்றிருக்கின்றன' என்றார். இது எதைக் காட்டுகிறது?
இங்கு சில நொடிகள் நிறுத்தி, வாரியார் மேலும் சொன்னார்: "இது எதைக் காட்டுகிறது என்றால், சிங்கப்பூர் ரசிகர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும், ஏற்கெனவே கம்பராமாயணப் பிரதி இருக்கிறது என்பதயே காட்டுகிறது' என நாசூக்காக இடித்துக் காட்டினார். மீதி புத்தகங்கள் உடனே விற்றுத் தீர்ந்தன''.