பாசக் கயிறு

டாக்டர் மாதவன் காரை நிறுத்திவிட்டு, வந்து தன் வீட்டின்  காலிங் பெல்லை அடித்த போது காலை ஒன்பது நாற்பது. பசி வயிற்றைக்  கிள்ளுகிறது.
பாசக் கயிறு

டாக்டர் மாதவன் காரை நிறுத்திவிட்டு, வந்து தன் வீட்டின்  காலிங் பெல்லை அடித்த போது காலை ஒன்பது நாற்பது. பசி வயிற்றைக்  கிள்ளுகிறது. உடல் முழுக்க அப்படியொரு வலி. நைட் டியூட்டியை முடித்துவிட்டு வருகிறார். இரவு முழுக்க தூக்கமில்லை. ஏழெட்டு ஆக்ஸிடென்ட் கேஸ்கள். அதில் மூன்று டெத். சில ஆண்டுகளாகவே தினசரி ஆக்ஸிடென்ட் மரணங்கள் ஒன்றிரண்டை தாண்டுவது சராசரி நிகழ்வாகப் போய்விட்டது. கிளம்பும் போது வருத்தமுடன் டெத் சர்டிஃபிகேட்களில் கையெழுத்திட்டு விட்டு கிளம்பினார். எல்லாமே அவருடைய பிள்ளை ராகவ் வயசு பிள்ளைகள்தான். ரெண்டு மூணு வயசு குறைவாகவே இருக்கலாம். உச்சியில்  புதர் போல முடி வளர்த்து, கீழே மூன்று பக்கங்களிலும் முழுமையாக முடியில்லாமல் இருக்கிற ஹை ஃபேட் கிராப் தலை இளைஞர்கள். பல்ஸர் வண்டிகளில் இந்த அடர்த்தியான வாகன நெரிசல்களில் "சர் சர்'ரென்று நூற்றி இருபதில் பறந்து  முட்டி மோதி செத்து, சாகடித்து, குடும்பத்தார்களின் இரங்கல் சடங்குகளுடன் மடிந்து போகும் அப்பாவி சாகஸ இளைஞர்கள்.  வீட்டு வேலைக்காரி தனம் வந்து கதவைத் திறந்தாள். சோர்வாக  நுழைந்தார். நுழையும் போதே, "" ஏங்க...ஏங்க...'' என்று அழுது  கொண்டே அவர் மனைவி துர்கா ஓடி வருகிறாள். கண்டதுக்கெல்லாம் டென்ஷனாகி அழும் மனுஷி அவள். ஆசிரியை.

""எ...என்னம்மா என்னாச்சி?''”

""ஐயோ என்னான்னு சொல்லுவேன்? அமெரிக்காவில நம்ம ராகவ் சீரியஸா கிடக்கிறானாங்க. ராத்திரியிலிருந்து பேதியாம். தண்ணி தண்ணியா போவுதாம்.  பத்து பதினைஞ்சி தடவைக்கு மேல போயிட்டு, பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிறானாம்''

""யா..யார்...யார் சொன்னா?''”

""யாரோ குமரன்னு ஒருத்தன் போன் பண்ணி சொன்னான்''” சொல்லிவிட்டு துடிக்கிறாள். அந்த செய்தி கூர்மையாக  அவரைத் தாக்கி விட்டது. அக்யூட் ஸ்டேஜில் பேதி என்பது எவ்வளவு வலிமையான உயிர்க் கொல்லி என்பதை நன்கறிந்தவர். மருத்துவத்தில் பாலபாடம் அது. 

அதிர்ந்து நிற்கும் இந்த டாக்டருக்கும், அழும் ஆசிரியைக்கும் பிறந்த ஒரே பிள்ளைதான் ராகவ் என்கிற ராகவன். பிரபலமான கல்லூரியில் பி.டெக் முடித்து விட்டு இவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் லாஸ் ஏஞ்சல்ஸில் எஸ்.ப்ரோ. கம்பெனியில் மூன்று வருட காண்ட்ராக்டில் பணிபுரிய சரியாக நாலு நாட்களுக்கு முன்னால்தான் போய் ஜாய்ன் பண்ணியிருக்கிறான். ஏர்போர்ட் போய் வழியனுப்பி வைத்துவிட்டு அழுத அந்த  நினைவுகள் இன்னும் அவர்கள் மனசில் முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது.  

""டாட்...மம்மீ... ஜஸ்ட் மூணே மூணு வருஷம்தான்''னு சொல்லி சிரிச்சிட்டு "டாட்டா' காண்பிச்சானே.. இப்போது துர்காவின் அழுகை சத்தம் கூடியது. 

""வேணா  வேணான்னு எவ்வளவு சொன்னேன்? கேக்கலியே. ராகவா...''”பெருத்த குரலில் கதறுகிறாள். டாக்டர் மாதவனுக்கு மாலை மாலையாய் வியர்த்துக் கொட்டுகிறது. அவசரமாக செல்லில் ராகவ்வின் நம்பரைத் தட்டினார். காத்திருந்தார். ரிங் போகிறது, ஆனால் யாரும் எடுக்கவில்லை. விட்டு விட்டு மூன்று தடவை ட்ரை பண்ணியும் நோ யூஸ். இப்போது அவர்களுக்கு பதட்டம் அதிகமாகிறது. துர்கா ஆயாசம் மேலிட கீழே சரிந்தாள்.  ஐந்தாவது தடவை ட்ரை பண்ண, ரொம்ப நேரம் கழித்து எடுத்தது யாரோ ஒரு வேற்று குரல்.

""நான் ராகவ்வோட ஃப்ரண்ட் அங்கிள், குமரன். கூட ஒர்க் பண்றேன். பக்கத்து ஃப்ளாட்லதான் இருக்கேன். இங்க ராகவ் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு அங்கிள். டயோரியா. தண்ணி தண்ணியா பீச்சியடிக்குது. நேத்து சாயந்திரத்தில இருந்தே இருந்திருக்கு, எங்கிட்ட கூட சொல்லல. இப்ப நினைவில்லாமதான் கிடக்கிறான். என்ன பண்றதுன்னு தெரியல.  பயமா இருக்கு அங்கிள். ஃப்ரண்ட் சுனிலை ஹெல்ப்புக்கு கூப்பிட்டிருக்கேன்.''

ஆஸ் எ டாக்டர் - அவருக்கு பையன் நிலைமையின் தீவிரம் புரிந்து விட்டது. டிஹைட்ரேஷன். இடையில் பதினாலாயிரம் கிலோ மீட்டர் தூரம். "குப்'பென்று மார்பு அடைக்கிற மாதிரி இருந்தது. "ஜிவ்'வென்று காதோரங்களில் உஷ்ணமாய் உணர்ந்தார். மயக்கம் வரும் போலிருக்கிறது. ஒரே பிள்ளை. வேலைக்காரி தனமும், பொம்மியும் அவர் தள்ளாடுவதைப் பார்த்து அரக்க பரக்க ஓடி வந்து அவரை தாங்கிப் பிடித்து உட்கார வைத்தார்கள். துர்கா ""ஏங்க...ஏங்க'' என்று கத்துகிறாள். "உஷ்' என்று எச்சரித்து விட்டு சுதாரித்துக் கொண்டு போனில் பேசுகிறார். 

""ப்ளீஸ்.. குமரன்... ராகவ்வை எழுப்புபா, டாடி கூப்பிடுறார்னு சொல்லு. முகத்தில தண்ணி அடி. டேய்... ராகவ்...ராகவ்...''”உடல் அதிர கத்தினார். குரலில் நடுக்கம். நாலைந்து குரலுக்கப்புறம் ராகவ் மெதுவாக வாயைத் திறந்தான். பலவீனமான குரல் 

""டாட்... டாட்...'' “ சொல்லிவிட்டு அழுகிறான். விசும்பும் சத்தம் கேட்கிறது.  
""மயக்கமா இருக்கு. நிறைய பேதியாயிடுச்சி''” அதுக்கு மேல என்ன கத்தியும் பதிலில்லை. குரல் அடங்கிவிட'. 

""ஏங்க... ஏங்க ராகவ்வை வந்துடச் சொல்லுங்க. வம்சத்துக்கு ஒத்த புள்ளை. ராகவா...ராகவா... டாய் அம்மா சொல்றேன் வந்துடு''-டாக்டர் மாதவன் மவுனமாக நிற்கிறார். 

இல்லை... இல்லை... நாம தைரியத்தை விடக்கூடாது. அவனுக்கு அது புது இடம். மனுஷாள் எதுவும் பழக்கமாகியிருக்காது. கூச்ச சுபாவம், உதவின்னு யார் கிட்டேயும் கேக்க மாட்டான். தனிமை பயம். நேரம் பார்த்தார். பத்தரை மணி. நமக்கும் லாஸ் ஏஞ்சல்ஸூக்கும் டைம் டிஃபரன்ஸ் மைனஸ் பன்னிரண்டரை மணி நேரம். úஸா இப்ப அங்க ராத்திரி பத்து மணி . இவ்வளவையும் இரண்டு நிமிட யோசிப்பில் முடித்துக் கொண்டு நிமிர்ந்தார். ஒரு நொடி சுதாரித்தார்.                                                                                                                                         
""கண்ணே டேய்... ராகவ்...  ராகவ்... தைரியத்தை வுட்ராதடா... முதல்ல எலெக்ட்ரால் பவுடரை கலக்கிக் குடிச்சியான்னு சொல்லு?''
""இ...ல்...லை...''  
""மடையனே... எதைச் செய்யணுமோ அதைச் செய்யாதே. ஃபூல்...ஃபூல்.. படிச்சிப் படிச்சி சொல்லியனுப்பினேனே. எதுக்கு மெடிசன் கிட்டுன்னு ஒரு பாக்ûஸ தயார் பண்ணி கொடுத்தனுப்பினேன்? வயசான காலத்தில எங்களை ஏம்பா இப்படி கஷ்டப் படுத்தறே?''” அவனிடமிருந்து பதில் இல்லை.
""தம்பி  குமரன்'' 
“""இருக்கேன் அங்கிள். ராகவ்வுக்கு நினைவு தப்பிடுச்சி அங்கிள்''”
""பயப்படாதப்பா இப்ப நீதாம்பா அவனுக்கு அம்மா அப்பா எல்லாம். கண்ணா. சீக்கிரமா ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போயிடணும். ஆம்புலன்ஸூக்கு கால் பண்ணு''” 
""இல்லை அங்கிள். எங்க ரெண்டு பேருக்குமே மெடிகல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இல்லை. அதுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேலாகும். ஒரு மாசத்துக்கான ட்ராவல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருக்கு.  பட் அது அகெய்ன்ஸ்ட் ஆக்ஸிடென்ட் இஞ்சுரி ஒன்லி''”

""ஐயோ அப்ப என் பையன் கதி? இன்ஷூரன்ஸ் கவரேஜ்  ஜாயின் பண்ணவுடனே கிடைச்சிடும்னு சொன்னானே?''”அவருக்கு பயத்தில் பேச்சு குழறியது, தடுமாறினார்.  துர்கா தலை தலையென்று அடித்துக் கொண்டு அழுகிறாள்.

டாக்டர் மாதவனுக்கு அமெரிக்க மருத்துவ விதிமுறைகள் தெரியும். அந்த நாட்டில் ட்ரீட்மெண்ட்டுக்கு மெடிகல் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்திருக்கணும். அது இல்லையென்றால், எந்த ஆஸ்பிட்டலிலும், எந்த டாக்டரிடமும், ட்ரீட்மெண்ட் கிடைக்காது. எமெர்ஜென்சின்னு ஒரு வழி இருக்கு. பட் அதுக்குக் கூட ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டீஸ் இருக்கிறது. பத்து மடங்கு பணத்தை பிடுங்கிடுவாங்க. அப்படியும் அவசரத்துக்கு  உதவாது. அதுக்கு ஒரு பெரிய க்யூ நிற்கும். அதற்குள் பட்டணம் பறி போய்விடுகிற சாத்தியம் இருக்கு. அமெரிக்காவும் நம்மைப் போல சுதந்திர நாடு என்பதால் ஏதாவது குறுக்கு வழிகூட இருக்கலாம். போய் நாலே நாளான இவர்களால் அதுவும் செய்ய முடியாது. இவர்களுக்கும் அங்கே உதவிக்கு ஒரு ஜீவன் கிடையாது. ஐயோ உன்னை எப்படிடா காப்பாத்தப் போறேன்?  எந்த அமெரிக்க டாக்டர்களும் அவனை காப்பாற்றப் போவதில்லை என்ற நிதர்சனம்; கையறு நிலையில் அவர். சூழ்நிலையின் பயங்கரம் உறைக்க, பீதியில் மவுனமாக அலறினார். அவரை துர்கா உலுக்க உலுக்க கொஞ்ச நேரம் அசையாமல் நிற்கிறார்.

நிதானமாக யோசித்தார். இனி அழுது கொண்டிருப்பதில் எவ்வித பலனுமில்லை. பதினாலாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் ஆபத்தான கட்டத்தில் கிடப்பவனை இங்கிருந்தே ட்ரீட் பண்ண முடியுமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. இருக்கும் ஒரே வழி இது.  "கடவுளே  எனக்கு மனவலிமையைக் குடு' நாலு வரிகள் கந்தசஷ்டி கவசத்தை மனமுருகி சொல்லிவிட்டு திடமாக எழுந்தார் ""குமரா'' என்று சத்தம் போட்டு கத்தினார்.

""எஸ்... அங்கிள்...''”

""சீக்கிரமா நீ ராகவ்வின் லேப்டாப்பை ஆன்பண்ணி ஸ்கைப்புக்கு வாப்பா ப்ளீஸ்... க்விக்...சீக்கிரம்... சீக்கிரம்ப்பா... ஆச்சா... ஆச்சா?''”  விஷயம் புரிந்து துர்கா ஓடிப்போய் லேப்டாப்பை ஆன் பண்ணி  அவரெதிரில் கொண்டு வந்து வைத்தாள். இரண்டொரு நிமிடங்களிலேயே ஸ்கைப் ஓப்பன் ஆகிவிட்டது.

எதிரே படுக்கையில் அவர்களுடைய எல்லா ஆசைகளுக்கும், சம்பாத்தியங்களுக்குமான, ஒரே வாரிசு, துன்பங்களுக்கும், சந்தோஷங்களுக்குமான, ஒரே வடிகால், ராகவ் கிழிந்த நாறாய் பேச்சு மூச்சின்றி கிடக்கிறான். அசைவில்லை. நாலு முறை கூப்பிட்டால் ஒரு தடவை உடம்பை முறுக்குகிறான். அத்தோட சரி. அவன் கோலத்தைப் பார்த்ததும், ""கண்ணே'' என்று ஓடி அணைத்துக் கொள்ள மனசு பரபரக்கிறது. ஊஹும் அழக்கூடாது. ஒரே மகனின் நிலையை கண்ணால் பார்த்ததும் துர்காவின் பினாத்தல் அதிகமாகி விட்டது.  இப்போது மாதவன் ஸ்கைப்பில் பார்த்தபடி ஒவ்வொரு செயல் முறைகளாக குமரனிடம் சொல்லிக் கொண்டே வர...”

""எஸ். சொல்லுங்க அங்கிள்''”   

""க்ரீன் கலர்ல உள்ளே ஒரு அட்டைப் பெட்டி இருக்கும் பாரு. அவனுடைய மெடிசன் பாக்ஸ். மேலே மெடிசன்னு எழுதியிருக்கும். அதில் எலெக்ட்ரால் -
(ELECTROL) பாக்கெட்டுகள் இருக்கும். அதில ரெண்டு பாக்கெட்டை பிரிச்சி ரெண்டு லிட்டர் தண்ணியில கலக்கிக் கொண்டா... க்விக்..க்விக்... வேகம்... வேகம்...''” அவன் தடதடவென்று உள்ளே ஓடினான்.  கடவுளே வாந்தி வராம இருந்தால் காப்பாத்திடலாம். துர்கா பக்கத்திலிருந்தபடி  ராகவ்...ராகவ்..என்று கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறாள்.

""ஆச்சா... ஆச்சா...தம்பி குமரா... சீக்கிரம்ப்பா''”  மீண்டும் கட்டடமே அதிரும்படி கத்தினார். டி ஹைட்ரேஷன் என்ற கான்செப்ட் அவரை அலைக்கழிக்கிறது. பேதிக்கு சிகிச்சை என்பது பெரிய விஷயமில்லைதான். ஆனால் சிகிச்சை பண்ண வழியே இல்லாத இடத்தில் அடுத்து டி ஹைட்ரேஷன் மரணந்தான். "ஐயோ பிள்ளையை கைசோர விட்ருவேனோ? ''                                                                                  
""அங்கிள் எலெக்ட்ரால் கலக்கிவிட்டேன்''

""குட்...  இப்ப அதிலிருந்து ரெண்டு டம்ளர் தண்ணியை அவனுக்கு குடிக்கக் கொடு''

""ஆச்சா... ஆச்சா...?''”வீறிட்டுக் கத்துகிறார். 

""போச்சு லைன் கட் ஆயிடுச்சி'' கணவனும், மனைவியும் தொடர்புக்கு மும்முரமாக போராடுகிறார்கள். ஊஹும். அவர் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்.  துர்கா முடியாமல் முந்தானையால் முகத்தை பொத்திக் கொண்டு குலுங்குகிறாள்.  அவள் கதறுவதைப் பார்த்து விட்டு மாதவன் அவளை முறைக்கிறார். இப்போது ஸ்கைப் மீண்டும் ஓப்பன் ஆகியது.
""அங்கிள்..அங்கிள்...  ராகவ்வை ரெண்டுடம்ளர் குடிக்க வெச்சிட்டேன். பட் இன்னும் கண்ணை திறக்கல''”   

""தேங்க்யூ தம்பி.  சீக்கிரமா அவனை நிமிர்த்தி படுக்க வைப்பா. அப்படித்தான், நேராக குட். ராகவ்வின் கால்களை நீட்டி வை. கரெக்ட் அப்படித்தான். வெரி குட். 

குமரன் நீ இப்ப ராகவ்வின் வயித்து தசையை கொத்தாய் பிடிச்சி இழுத்து விடு. லேப்டாப்பை கிட்ட கொண்டு போ... அதை நான் பார்க்கணும்'' குமரன் சொன்ன மாதிரி செய்தான். அவள் பார்த்துக் கொண்டிருக்க இழுத்து விட்டதினால் குவிந்த ராகவ்வின் வயிற்று தசை நாலு செகண்டில் நார்மலுக்குப் போனது.

""ஓ.கே. குமரன் பயப்படாத. நான் பயந்த அளவு அவனுக்கு டி ஹைட்ரேஷன் இல்லை. சமாளிச்சிடலாம். ஆனா அவன் அடிக்கடி எலெக்ட்ரால் தண்ணியை குடிச்சிக்கிட்டே இருக்கணும். சரியா?''

அந்நேரத்திற்கு ராகவ் சைகை காட்ட, மறுபடியும் குமரன் அவனை டாய்லெட்டுக்கு தாங்கி பிடித்துக் கொண்டு போனான். துர்கா அவரிடம். 

நிஜமா? பயமில்லையே?” அவளை சற்று தூரமாய் இழுத்து வந்தார். பேசுவதற்கு முன் தன்னை தயார்ப் படுத்திக் கொண்டார். கொட்டிவிடும் விளிம்பில் கண்ணீர்.

""துர்கா தைரியமாக இரு, அழாத. தெய்வத்தை வேண்டிக்குவோம். நம்ம பையன் சீரியஸ்ஸான கட்டத்தில் இருக்கான்''”தாளாமல் ஓவென்று கத்தியவளை அடக்கினார். அவள் முந்தானையால் முகத்தைப் பொத்திக் கொண்டாள். அப்போது டாய்லெட்டிலிருந்து குமரன் தோளில் தொங்கியபடி வந்த ராகவ்வைப் பார்த்து, ""ராகவ் வயித்த வலிக்குதாடா?''

மெதுவாக, ""ஆமாம்'' என்று தலையாட்டினான். ""இருக்கட்டும். ராகவ் பயப்படாதேப்பா. அப்பா இருக்கேன்ல. நான் பார்த்துக்கறேன். சொல்லு வாந்தி வருதா?'' இல்லையென்று தலையாட்டினான். கொஞ்ச நேரத்திற்கொரு முறை "உஸ்' என்று ஆயாசமாக கண்களை மூடிக் கொள்கிறான். 

அடிக்கொருதடவை வறண்ட உதடுகளை நாக்கால் வருடிக் கொண்டேயிருக்கிறான்.""குமட்டல் இருக்கா?''""இல்ல''. ""குட். வயித்தில இரைச்சல் இருக்குதா?''"ஆமாம்' என்று தலையாட்டிவிட்டு குமரனை பிடிச்சிக்கிட்டு மறுபடியும் அவசரமாக டாய்லெட்டுக்கு  ஓடினான். காத்திருந்தார்கள். 

""இப்ப பரவாயில்லையா?'' என்று துர்கா அவரை துளைத்துக் கொண்டே இருந்தாள்.

""இன்னும் அதற்கான ட்ரீட்மெண்ட்டையே ஆரம்பிக்கல'' கொஞ்ச நேரத்தில் குமரன் அவனை கைத்தாங்கலாக திரும்ப அழைத்து வந்து படுக்க வைத்தான்.

(அடுத்த இதழில் நிறைவு பெறும்)     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com