கடந்த காலத்தில் எத்தனையோ சிறப்பான சிறுகதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ் வாசகர்களிடமும், தமிழ் பத்திரிகைகளிலும் அவை சிறுகதைகளுக்கு என்று ஒரு தனித்துவமான இடம் உண்டு. ஆனால் அண்மைக்காலமாக அந்த நிலையில் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் உண்மை.
தற்காலத்திலும் உன்னதமான சிறுகதைகள் (outstanding) எழுதப்பட வேண்டும், என்றென்றும் பேசப்படக் கூடியவையாக, பின்னால் வருபவர்களுக்கு வழிகாட்டக் கூடியவையாக அமைய வேண்டும் என்ற விருப்பத்தினால் தொடங்கப்பட்டதுதான் தினமணி- சிவசங்கரி சிறுகதைப் போட்டி. புகழ்வாய்ந்த பத்திரிகையும், எழுத்தாளர் ஒருவரும் இணைந்து முன்னெடுத்த இந்தத் திட்டத்தின் இன்னொரு நோக்கம் புதிய திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பது.
இதற்காக ஆண்டுதோறும் ஒரு லட்ச ரூபாயைப் பரிசுத் தொகையாக அளித்து வருகிறார் எழுத்தாளர் திருமதி சிவசங்கரி. தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம், மற்ற கதைகளில் சிறந்த மூன்று படைப்புகளுக்குத் இரண்டாவது பரிசாக ரூ. 25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 15 ஆயிரம், மற்றும் 10 நல்ல கதைகளுக்குத் தலா ரூ. 1000 என்று பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை பத்திரிகை மூலம் பரவலாக வாசகர்களைச் சென்றடைவதோடு மட்டும் நின்று விடாமல் அதை எழுதியவரைப் பாராட்டும் விதமாக, அவருக்கு பெரிய தொகை ஒன்றும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும் என்பது அவரது விருப்பம். அதற்காக ரூ. 50 ஆயிரத்தை முதல் பரிசாக அறிவித்தார் சிவசங்கரி.
இந்த ஆண்டு போட்டிக்கு வந்த கதைகளை நடுவர்கள் குழு, பரிசுத் திட்டத்தின் நோக்கங்களைக் கவனமாக கருத்தில் கொண்டு பரிசீலித்தது. போட்டிக்கு வந்த கதைகளில், முதல் பரிசான ரூ. 50 ஆயிரம் பெறத் தகுதியான ஆகச் சிறந்த சிறுகதை (Outstanding) எதுவும் இல்லை என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தது. எந்தக் கதைக்கும் முதல் பரிசான ரூ. 50 ஆயிரத்தை அளிப்பதற்கில்லை என்பதை வருத்தத்துடன் நடுவர் குழு ஒரு மனதாக முடிவு செய்தது.
அதே நேரம் அறிவிக்கப்பட்ட மொத்தப் பரிசுத் தொகையான ரூபாய் ஒரு லட்சத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம் என சிவசங்கரி அவர்கள் கேட்டுக் கொண்டார். அதனால் முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 15 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரமும் அளிக்கலாம்; ஆறுதல் பரிசாகப் பத்து நல்ல கதைகளுக்குத் தலா ரூ. 1000 என அளிக்கப்பட்ட தொகைக்கு பதிலாக அவற்றுக்கு ரூ. 5000 அளிக்கலாம் என அவர் யோசனை தெரிவித்தார்.
அதை ஏற்ற நடுவர் குழு இந்த ஆண்டு கீழ்க்கண்டவாறு பரிசளிக்க ஒரு மனதாக முடிவு செய்தது.
இந்த ஆண்டும் சென்ற ஆண்டைப் போலவே 13 கதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல் பரிசான ரூ. 50 ஆயிரம் அளிக்கப்படவில்லை என்றாலும் மொத்தப் பரிசுத் தொகையிலோ, கதைகளின் எண்ணிக்கையிலோ மாற்றம் இல்லை. மாறாக ஆறுதல் பரிசு பெறும் கதைகள் சென்ற ஆண்டைவிடக் கூடுதலாக, இம்முறை ரூ.5000 பெறுகின்றன. நல்ல கதைகளைத் தொடர்ந்து எழுதிவர அவர்களுக்கு ஊக்கமாக இது அமையும் என நம்புகிறோம்.
பரிசு பெற்றவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!
தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த சிறுகதைகளில் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் விவரம் வருமாறு:
தந்தையுமானவள் - எஸ்.பர்வீன் பானு
பார்வைகள் - சரசுராம் (கே.ராம்குமார்)
கருணை - ஆதித்யா (ரமணன்)
ஆறுதல் பரிசு தலா ரூ.5000
1. ரெங்கநாயகி - நா.கோகிலன்
2. அப்பாவைத்தேடி - சோ.சுப்புராஜ்
3. மனதில் ஆயிரமாயிரம் நதிகள் - பவித்ரா நந்தகுமார்
4. புழுதி - அலையாத்தி செந்தில்
5. பாசக்கயிறு - செய்யாறு தி.தா.நாராயணன்
6. இப்படியும் சிலர் - க.பாபு
7. ஒரே ஒரு மசால் தோசை - எஸ்.ஸ்ரீதுரை
8. தாண்டவம் - சத்தியப்பிரியன்
9. பகைவனுக்கருள்வாய் - ஜெயா வெங்கட்ராமன்
10. தஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்கள் - அழகிய சிங்கர்
* பரிசு வழங்கும் நிகழ்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
* பரிசு பெற்றவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் சுயவிவரக் குறிப்புகளை உடனே அனுப்பி வைக்கவும்.