சொன்னால் நம்பமாட்டீர்கள்! -  24

கலைவாணருடன் போட்டி கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் எனது நெருங்கிய நண்பர்.
சொன்னால் நம்பமாட்டீர்கள்! -  24

கலைவாணருடன் போட்டி

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் எனது நெருங்கிய நண்பர். எனது நகைச்சுவைப் பேச்சுகள் அவரை மிகவும் கவர்ந்திருந்தன. பல ஊர்களுக்கு அவரும் நானும் பிரயாணம் செய்திருக்கிறோம். பல பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறோம்.

மகாத்மா காந்தியடிகள் அமரரானபோது சென்னை தியாகராய நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயத்தில் 30 நாட்கள் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. 30-ஆவது நாள் கலைவாணரும் நானும் பேசுவதாக ஏற்பாடு. மேற்படி கூட்டத்தில் பேசுவதற்காக இருவரும் ஒரே காரில் சென்றோம். அப்போது என்.எஸ்.கே. சொன்னார். "இன்று நான் பேசிய பிறகு நீங்கள் பேச வேண்டும், முடியுமா?' என்றார். "முடியும்' என்றேன். "நான் பேசிவிட்டால் கூட்டம் இருக்காதே' என்றார். "கூட்டத்தை இருக்கும்படி செய்யலாம்' என்றேன். "தோல்வி அடைவீர்கள்' என்றார். "பார்க்கலாம்' என்றேன்.

"நான் பேசிய பிறகு கூட்டத்தை நிறுத்தி வைத்து அரை மணி நேரம் நீங்கள் பேசினால் ரூ.1000/- தருகிறேன்' என்றார்.

"ரூபாய் ரெடியாக இருக்கட்டும்' என்றேன்.

இருவரும் கூட்டத்திற்குச் சென்றோம். சுமார் 3000 பேர் கூடியிருந்தனர். பிரார்த்தனை முடிந்ததும் ஏற்கெனவே நாங்கள் திட்டமிட்டபடி கலைவாணர் என்.எஸ்.கே. பேசினார். அரை மணி நேரம் மிக உருக்கமாகப் பேசினார். இயற்கையாக அவருக்குள்ள நகைச்சுவையும் ஆங்காங்கே வெளிப்பட்டது. அவர் பேசி முடிந்ததும் கண் மூடிக் கண் திறப்பதற்குள் நான் எழுந்து கம்பீரமான குரலில் ""சங்க நாதம் கேட்குது, சாந்த காந்தி சத்தியத்தின் சங்க நாதம் கேட்குது'' என்று பாட ஆரம்பித்தேன்.

எதிர்பாராதவிதமாக இப்படி நான் திடீரென்று பாட ஆரம்பித்ததும் சபை அப்படியே நிசப்தமாகி வெகு கூர்மையுடன் என் பாட்டை கேட்டுக் கொண்டிருந்தது. பாட்டுப் பாடி முடிய பத்து நிமிடங்கள் ஆயின. பாட்டு முடிந்ததும் பலத்த கரகோஷம், அடுத்த விநாடி மக்களைப் பார்த்து நான் ஒரு கேள்வி கேட்டேன்.

""உங்களில் யார் யார், காந்தி பக்தர்கள் தயவுசெய்து கையைத் தூக்குங்கள் பார்க்கலாம்'' என்றேன். அனைவரும் கை தூக்கினார்கள். ""அப்படியானால் காந்தியடிகள் பிரார்த்தனை செய்தது போல் நாமும் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாமா?'' என்று கேட்டேன். அனைவரும் ஒரே குரலில் ""சரி''யென்றார்கள். ரகுபதி ராகவ ராஜாராம் பிரார்த்தனை பத்து நிமிடம் நடத்தினேன். அதன் பின்னர், மக்களிடம் சொன்னேன். ""கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார். அதைப் போலவே நீங்களும் அவரை நேசிக்கிறீர்கள். அதனால் நான் அவரிடம் சொன்னேன். ""நீங்கள் முதலில் பேசிவிட்டால் மக்கள் கலைந்து விடுவார்கள். ஆகவே நான் முதலில் பேசி விடுகிறேன்'', என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், ""நீங்கள் நினைப்பது தவறு. இன்று கூட்டத்திற்கு வருபவர்கள் எனக்காகவும், உங்களுக்காகவும் வருபவர்கள் அல்ல; காந்தி மகாத்மாவின் பக்தர்கள். ஆகவே கூட்டம் முடியும் வரையில் இருப்பார்கள்'' என்று சொன்னார். அவர் சொன்னதை நம்பித்தான் நானும் அவர் பேசிய பிறகு பேசிக் கொண்டிருக்கிறேன். ""நீங்கள் கலைவாணர் சொல்லியபடி கடைசி வரையில் இருப்பீர்களா?'' என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டேன்.

""கண்டிப்பாக இருக்கிறோம்'' என்று ஏகோபித்த குரலில் மக்கள் பதில் கொடுத்தார்கள். உடனே என்.எஸ்.கே. எழுந்து அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட பந்தயத்தைப் பற்றி மக்களிடம் விளக்கிச் சொல்லி, ""பந்தயத்தில் சின்ன அண்ணாமலை ஜெயித்து விட்டார். நான் சொன்னபடி ரூ.1000-த்தை இப்போதே கொடுக்கிறேன்'' என்று பணத்தைக் கொடுத்தார். நான் அதை வாங்கி தக்கர் பாபா வித்யாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினேன்.

திராவிடக் கழகத்தினர்  கலாட்டா

1947 -இல்  நமது  நாட்டுக்குச் சுதந்திரம் வந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மந்திரி சபை நடந்தாலும்  காங்கிரஸ்   கட்சி கலகலத்திருந்தது. திராவிடக் கழகம்  பலம் பெற்று கொண்டிருந்தது. காங்கிரஸ் தொண்டர்கள்  தெருவில் நடந்தால்  திராவிடக் கழகத்தவர் அவர்களை  நையாண்டி செய்வார்கள்.  வீண் வம்பிழுப்பார்கள்   "ஆறு அவுன்ஸ்'  என்றும்   "ஐந்து ஏக்கர்'   என்று கேலி செய்வார்கள். காங்கிரஸ் கூட்டங்களை  நடத்த விடாமல் திராவிடக் கழகத்தினர்   கலாட்டா செய்வார்கள்.

இம்மாதிரி  செய்யும்  திராவிடக் கழகத்தினரைத்  தட்டிக்  கேட்க  ஆள் இல்லாமல்  போய் விட்டதனால்  அந்தத் தம்பிகள்  சண்டப்பிரசண்டம் செய்து கொண்டிருந்தார்கள்.  போலீசாரும் ஏன்  என்று கேட்கவில்லை.  காங்கிரஸ் அரசாங்கமும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நானும் என்னைப்  போன்ற  சில காங்கிரஸ்  பேச்சாளர்களும்,  திரு.ம.பொ.சி அவர்களும்தான்  ஆங்காங்கே  நடக்கும் காங்கிரஸ்  கூட்டங்களில்   திராவிடக் கழகத்தைத் தாக்கிப் பேசுவோம்.  நான் பெரியார் ஈ.வெ.ரா அவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசுவேன்.  அதனால்  திராவிடக் கழகத்தினர்  என் மீது ரொம்பவும்  காட்டமாக இருந்தனர்.

ஒரு நாள்  சென்னை  மயிலாப்பூரில்  ஒரு நண்பரின்  வீட்டுக்குச் சென்றுவிட்டு, குளக்கரையிலுள்ள  பஸ் நிலையத்திற்குச் சென்று  கொண்டிருந்தேன்.  என் பின்னே  சிறு  கூட்டமாகச் சிலர் வந்து என்னை மிகக்  கேவலமாகத் திட்டினார்கள். பேச்சும்  போக்கும் அவர்கள்  திராவிடக் கழகத்தினர்  என்பது தெளிவாகத் தெரிந்தது.

லோகநாதன்  என்ற  ஓர் இளைஞர்  என்  சட்டையைப்  பிடித்து  இழுத்துக் கிழித்து,  ""ஏன்டா நீ தானே கூட்டங்களில்  பெரியாரைத் தாறுமாறாகப் பேசுகிறாய்.  இனி  அம்மாதிரி  பேசினால்  காலை  கையை ஓடித்துவிடுவோம்.

இப்போது நீ ஒரு தமிழன் என்பதினால்  ( பிராமணன் அல்லாதவன்)  உன்னை உயிரோடு  விடுகிறோம்'' என்று கூறினார்.  இம்மாதிரி இம்சைகளுக்கிடையே பஸ்  ஏறினேன்.  பஸ்ûஸ  சுற்றி நின்று கொண்டு மேற்படி  நபர்கள்  பலவாறு கூச்சலிட்டார்கள்.  பஸ்  கண்டக்டரும்  அவர்களுடன்  சேர்ந்து கொண்டு, ""பேமானி''  என்றும்  ""கழுதை''  என்றும் திட்டி,  காங்கிரஸ்  மீது வசை பாடினார்.

இவ்வளவையும்  பொறுமையாகக் கேட்டுக் கொண்டு கிழிந்த  சட்டையுடன் தலைவர்  காமராஜ்  இல்லத்திற்குச் சென்றேன்.  என் அலங்கோல நிலையைப் பார்த்துப் பதறிப் போன  காமராஜ்  விஷயத்தை  விசாரித்துத் தெரிந்து கொண்டார். அவருக்கு அபார  கோபம் வந்துவிட்டது.


டெலிபோனை  எடுத்து  அப்போதைய  முதலமைச்சராக  இருந்த திரு. குமாரசாமி  ராஜா  அவர்களைக் கூப்பிட்டு,  ""என்ன கவர்ன்மெண்ட் நடத்துறீங்கண்ணே, கதர்  சட்டை  போட்டவன்  வீதியிலே  நடக்க முடியலே, மந்திரிங்க மட்டும் காருலே  கொடி  போட்டுக்கிட்டு போனா போதுமான்னேன்'' என்று  கூறி என் சம்பந்தமாக  நடந்ததைச் சொல்லி,  ""இதற்கு உடனே  ஏதாவது செய்தாகணும்''  என்று   சொல்லிவிட்டு   "டக்'  கென்று  போனை வைத்துவிட்டார். 

நான்  உடனே,  ""ஐயா  இது என் விஷயம் மட்டுமல்ல,  தமிழ்நாடு  பூராவும் காங்கிரஸ் தொண்டர்கள்  இந்த மாதிரி  அவஸ்தைக்குள்ளாகி  இருக்கிறார்கள்.

அதற்கு  மொத்தமாக  நாம்  கட்சிரீதியாக  ஏதாவது  செய்ய வேண்டும்.

போலீஸ்  நடவடிக்கை  இதற்கு  நிரந்தர  பரிகாரமாகாது''  என்றேன்.  

""என்ன செய்யலாம்  சொல்லுங்க''  என்றார். 

""திராவிடக் கழகத்தை எதிர்த்து  ஓர் இயக்கம்  நடத்தினால்  காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புதிய  தெம்பு  உண்டாகும்.  கட்சிக்கும்  புதிய  பலம் உண்டாகும்''  என்றேன்.

""ஒரு கட்சியை எதிர்த்து  இயக்கம்  நடத்துவது, அரசியல்ரீதியாக சரியாக இருக்காதே,  திராவிடக் கழகம்  பிரிவினைக் கட்சிதானே, அதனால்   பிரிவினை  எதிர்ப்பு  இயக்கம்  என்று  நடத்தினால்  என்ன?'' என்று கேட்டார்.

""பிரிவினை  எதிர்ப்பு   என்று  நடத்தினால்  பரபரப்பு  இருக்காது.  திராவிட இயக்க  எதிர்ப்பு''  என்று நடத்தினால்தான்  பரபரப்பு  இருக்கும்''  என்று சொன்னேன்.

""சரி அப்படியானால்  உடனே வேலையைத் தொடங்குங்கள்,''  என்று சொல்லி ஆயிரம்  ரூபாயை  எடுத்துக் கொடுத்து,  தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டிக்கு போன் செய்து,  எனக்கு  ஒரு   செவர்லட்  வான் ஒன்றைக் கொடுக்கும்படியும், டிரைவர்  ஏழுமலை  என்பவரை  வண்டியை  ஓட்டும்படியும் ஏற்பாடு  செய்தார்.

""டிரைவர் ஏழுமலை சிறந்த காங்கிரஸ் தொண்டர் உணர்ச்சி  உள்ளவர். கலகம் வந்தாலும் உங்களுக்கு, பாதுகாப்பாக இருக்கக் கூடியவர்'' என்று காமராஜ் சொன்னார், மேலும், "பிரிவினை எதிர்ப்பு  என்றால்  நானே தலைமை  வகித்து இயக்கத்தை  நடத்தலாம்.  அது அரசியல்ரீதியாக  சரியாக இருக்கும்.  திராவிட இயக்க  எதிர்ப்பு  என்றால் நான்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து கொண்டு  ஒரு கட்சிக்கு  எதிர்ப்பு  என்ற இயக்கத்தை  நடத்தக் கூடாது. ஆகவே  இதை நீங்களே  நடத்துங்கள்; நான் என்ன  உதவி வேண்டுமானாலும்   செய்கிறேன்''  என்றார்.

"அப்படியானால்  ம.பொ.சி. அவர்களைக் கேட்கட்டுமா?''   என்றேன்.  ""சரியான பொருத்தமானவர்தானே, உடனே  வேண்டியதை  அவரை ஆலோசித்துச் செய்யுங்கள்,'' என்றார். 

நான்  தலைவர் காமராஜ்  அவர்களிடம்  விடை பெற்றுக் கொண்டு  வீட்டிற்கு  வந்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com