குருகிராமில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் தில்லியில் இருந்து லண்டனுக்கு முதல் பேருந்து சேவையை அறிவித்துள்ளது.
அட்வென்சர்ஸ் ஓவர்லேண்ட் என்ற சுற்றுலா நிறுவனம் தில்லிக்கும், லண்டனுக்கும் இடையிலான முதல் சுற்றுலாப் பேருந்து சேவையை அறிவித்துள்ளது.
இந்த சுற்றுலா பேருந்து சேவைக்கு "பஸ் டு லண்டன்" என பெயரிட்டுள்ளார்கள். இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் தில்லியில் புறப்பட்டு மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷியா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் என மொத்தம் 18 நாடுகள் வழியாக பயணம் செய்து லண்டனை அடைவார்கள்.
இந்த பயணத்திற்கு பிரத்யேக சொகுசுப் பேருந்து தயாராகி வருகிறது. இதில் 20 பயணிகள், 2 ஓட்டுநர்கள், ஒரு உதவியாளர்கள் மற்றும் ஒரு வழிகாட்டி பயணம் செய்யும்படி வடிவமைத்து வருகின்றார்கள். இந்தப் பயணத்தில், மொத்தம் 20 ஆயிரம் கிலோ மீட்டரை 70 நாள்களில் சென்றடைவார்கள். பயணிகளின் விசா அனுமதிகள் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், இந்தப் பயணம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். பயணிகள் தங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப வெவ்வேறு இடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். தில்லியில் இருந்து லண்டன் வரை முழு பயணம் செல்வோரின் பயணச் செலவு ரூ. 1.50 லட்சம் என தெரிவித்துள்ளனர்.
துஷார் அகர்வால் மற்றும் சஞ்சய் மதன் ஆகிய இரு பயண ஆர்வலர்கள் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் லண்டனுக்கு சாலைப் பயணம் மேற்கொண்டதை அடுத்து இந்தப் பயணச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அட்வென்சர்ஸ் ஓவர்லேண்ட் இணை நிறுவனர் துஷார் அகர்வால் கூறுகையில், பயணப் பிரியர்கள் பலர் லண்டனுக்கு சாலை வழியாக செல்ல விரும்பியதை அடுத்து நாங்கள் இந்த பயணத்தை திட்டமிட்டோம். இந்தச் சேவை மூலம் லண்டனுக்கு முதல் பேருந்தாக இருக்கும் என்று நம்புகிறோம். 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம். அனைத்து நாடுகளிலும் உள்ள கரோனா தொற்றின் நிலைமையை ஆராய்ந்த பிறகு மற்ற முடிவுகள் வெளியிடப்படும்.
70 நாள்கள் பயணத்தின் போது அனைத்து வசதிகளும் வழங்கப்படும். 4 நட்சத்திர அல்லது 5 நட்சத்திர விடுதிகளில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் பயணிகளுக்கு அனைத்து நாடுகளிலும் இந்திய உணவு வழங்கப்படும் என்று கூறினார்.