தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்) கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச நிகர லாபம், வருவாயைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2022-23-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.387.87 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது, நிறுவனத்தின் அதிகபட்ச ஆண்டு நிகர லாபமாகும். முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் இது ரூ.14.32 கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக ரூ.5,225.41 கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டின் வருவாயான ரூ.4,069.04 கோடியுடன் ஒப்பிடுகையில், இது 28 சதவீதம் அதிகமாகும்.
கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.102.83 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.22.4 கோடியாக இருந்தது.
நிறுவனப் பங்குகளுக்கு 50 சதவீத ஈவுத் தொகை வழங்க இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.