கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிகர லாபம் 5 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜனவரி முதல் மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,191 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.2,409 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனம் ஈட்டியுள்ள நிகர லாபம் ஐந்து மடங்குக்கும் மேலாகும்.
எனினும், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,15,487 கோடியிலிருந்து ரூ.2,01,022 கோடியாகக் குறைந்துள்ளது.
2021-22-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் ரூ.14,663 கோடியாக இருந்தது. அது, கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.12,852 கோடியாகக் குறைந்துள்ளது.
2021-22-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,125 கோடியாக இருந்தது. அது, 2022-23-ஆம் நிதியாண்டில் பல மடங்கு அதிகரித்து ரூ.35,997 கோடியாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.