வணிகம்

தொழில் துறை வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்

DIN

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றபிறகு, பல்வேறு வளங்களையும் தன்னகத்தே கொண்டு, தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தொழில்துறையில் தமிழகம் அபார வளர்ச்சியை அடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்தி வருகிறார்.

அரசின் தொழில் கொள்கை 

“உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை அடைந்து, அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டும்” என்பது அரசின் கொள்கையாகும் என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழில்துறை வழித்தடங்கள்

இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களும் தொழில்துறை வழித்தட திட்டங்களின் கீழ் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு. டிட்கோ, சென்னை பெங்களூரு தொழில்துறை வழித்தடம் (சிபிஐசி), சென்னை கன்னியாகுமரி தொழில்துறை வழித்தடம் (சிகேஐசி), கொச்சி - கோயம்புத்தூர் - பெங்களூரு தொழில்துறை வழித்தடம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத் திட்டங்களின் வளர்ச்சிக்கான இணைப்பு முகமையகம் (நோடல் ஏஜென்சி) ஆகும். நியமிக்கப்பட்ட இணைப்பு முகமையமாக, டிட்கோ இந்த வழித்தடங்களில் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கிறது.

தமிழ்நாட்டின் சிறப்புகள்

  • இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை உடைய மாநிலம்
  • அதிக உற்பத்தி மற்றும் நுகர்வு மாநிலம்
    அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) பெறுபவர்களில் முதற் நான்கில் ஒன்று
  • நிலையான அரசியல் சூழலுடன் செயலூக்கம் மற்றும் முதலீட்டாளர் நட்பு பாராட்டும் அரசாங்கம்
  • மேம்பட்ட தொழிலாளர் உறவுடன் அதிக திறமையான மற்றும் பலதரப்பட்ட பணியாளர்கள்
  • மாநிலம் முழுவதும் நவீன உள்கட்டமைப்பு
  • சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளில் முன்னணியில் உள்ளது
  • உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இரண்டிலும் முன்னிலையில் உள்ளது
  • அமைதியான வாழ்க்கை நிலைமை மற்றும் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்ட நகரமயமாக்கப்பட்ட மாநிலம்
  • 63-க்கும் மேற்பட்ட பார்ச்சூன் 500 நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டு இருப்பைக் கொண்டுள்ளன


தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு

  • நான்கு சர்வதேச விமான நிலையங்கள் (சென்னை, கோவை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை); இரண்டு உள்நாட்டு விமான நிலையங்கள் (சேலம் மற்றும் தூத்துக்குடி) மற்றும் புதுச்சேரி உள்நாட்டு விமான நிலையமும் சென்றடையும் தூரத்தில் உள்ளன
  • 4 பெரிய பகுதிகள் (காட்டுப்பள்ளி, எண்ணூர், சென்னை மற்றும் தூத்துக்குடி); 23 இதர துறைமுகங்கள்; காரைக்கால்  துறைமுகமும் சென்றடையும் தூரத்தில் உள்ளது.
  • மொத்த சாலை கட்டமைப்பு 2.13 லட்சம் கிமீ
  • 30.2 GW நிறுவப்பட்ட திறன் கொண்ட மின் உபரி மாநிலம்
  • 15.2 Tbps அலைவரிசை வசதிகள் உண்டு
  • 23 பெரிய அரசு தொழில் பூங்காக்கள், 3 ஜப்பானிய தொழில்துறை நகரங்கள், 4-க்கும் மேற்பட்ட பெரிய தனியார் தொழில் பூங்காக்கள்


முதலீட்டாளா்களின் முதல் முகவரி இனி தமிழகம்

பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம், புதிய தொழில் ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தமிழக அரசின் சாா்பில் சென்னையில் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற, ‘தொழில் முதலீட்டாளா்களின் முதல் முகவரி-தமிழ்நாடு’ என்ற இந்த நிகழ்ச்சியில், 35 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. மேலும், ஒன்பது ஆலைகளுக்கான அடிக்கல்லும், 5 ஆலைகளின் செயல்பாடுகளை தொடக்கியும் வைத்தாா். 

நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், 
கரோனா காலத்திலும் கணிசமான முதலீடுகளை தமிழகம் ஈா்த்துள்ளது. சவால்களை எதிா்கொள்ளும் எங்களது அரசின் திறன் என்றென்றும் நிலைத்து நீடித்து இருக்கும். உலகளவில் உற்பத்தித் துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் புத்துணா்வு பெற்று இயங்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தை உயா்த்துவதே லட்சியம்

தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயா்த்துவதே எங்களது அரசின் லட்சியம். தமிழ்நாடு என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது; இருந்து வருகிறது. அத்தகைய தமிழ்நாடு, முதலீட்டாளா்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலா்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக உருவாக்குவதே எங்களது குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரது ஒத்துழைப்பையும் கோருகிறேன்.

தொழில்புரட்சி 4.0

மின் வாகனங்கள் உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள், காற்றாலை கலன்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையங்கள், மின்னணு வன்பொருள்கள் உற்பத்தி ஆகிய துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில்துறைப் புரட்சி 4.0 என்று அழைக்கப்படும் நான்காவது தொழிற்புரட்சி நமது மாநிலத்துக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும்.

ஒற்றைச் சாளர இணையம் 2.0

தொழில் புரிவதை எளிதாக்கவும், அரசின் அனுமதிகளை விரைந்து வழங்கிடவும் ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-வை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

இது குறித்து அவா் பேசுகையில், முதலீட்டாளா்களுக்கு உதவிடும் வகையில் 24 துறைகளின் 100 சேவைகள் கொண்ட ஒரு மேம்படுத்தப்பட்ட இணையதளமாக அது இருக்கும். இணைய முறையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வாடிக்கையாளா்களுடன் உடனடி உரையாடல்கள் நடத்தப்படும். இந்த வசதிகள் அனைத்தும் ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 மூலமாக கிடைக்கும். கூடுதலாக 210 சேவைகளை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் சோ்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தாா்.

உதகையில் அமையவுள்ள தொழில்நுட்ப பூங்கா 

கடந்த தொழில் துறை மானியக் கோரிக்கையில் நீலகிரியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

எச்.பி.எஃப். பகுதியில் 5 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.100 கோடி மதிப்பில் விரைவில் பணிகள் துவங்குகிறது. இதன்மூலம் சுமாா் ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். கோவை மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்கா நிறுவனத்தில் சென்னை மாவட்டங்களிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் வரப்பெற்றதன் மூலம் அனைத்து நிறுவனங்களும் அங்கு நிரப்பப்பட்டதன் காரணமாக அம்மாவட்டம் நன்கு வளா்ச்சி பெற்றுள்ளது.

காா் நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கம்

காா் உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான ரினால்ட் நிசான் நிறுவனம், தனது விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.5 ஆயிரத்து 300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது. 

இதன் அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரத்து 300 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதற்கான அரசு உத்தரவு கடந்த ஜனவரியில் பிறப்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு - அரபு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம்

அரபு நாடுகளில் மிகப்பெரிய வணிக வளாகங்களை நடத்தி வரும் லுலு நிறுவனம், தமிழகத்திலும் 2 புதிய வணிக வளாகங்களை கட்டமைக்கவுள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் அபுதாபியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்தானது.

புதிய வணிக வளாகங்கள்

புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலமாக, ரூ.3,500 கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில், ரூ.2,500 கோடி முதலீட்டில் 2 வணிக வளாகங்கள் மற்றும் ஆயிரம் கோடி ரூபாயில் ஓா் ஏற்றுமதி சாா்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளது.

அபுதாபி வா்த்தக சபைத் தலைவரும், ஐக்கிய அரபு நாடுகளின் வா்த்தக சபை மற்றும் கூட்டமைப்புத் தலைவருமான எச்.இ.அப்துல்லா முகமது அல் மஸ்ரோயீயை சந்தித்துப் பேசிய போது, தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல், உணவுப் பூங்காக்கள், குளிா்பதனக் கிடங்குகள், சரக்குகள் மற்றும் சேவைகள், வணிகத்தீா்வைத் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, ஏடிக்யூ என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எச்.இ.முகம்மது அல் சுவைதியைச் சந்தித்துப் பேசினாா். அப்போது, தமிழகத்தில் மருத்துவ சுகாதார திட்டங்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தாா்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்.. 

  • டைட்டன் தொழிற்சாலை
  • தொழில்பூங்கா, சென்னை
  • டைசல் உயிரி தொழில்பூங்கா, சென்னை
  • தொழில்பூங்கா, கோவை
  • மகிந்திரா உலக நகரம், செங்கல்பட்டு
  • அசென்டாஸ் ஐடி பூங்கா, சென்னை
  • சென்னை வரத்தக மைகம்
  • ஸ்பிக்
  • எல் அண்ட் டி கப்பல் கட்டுமானம்
  • நாட்கோ பார்மா
  • மணலி பெட்ரோகெமிக்கல்ஸ்

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் தற்போது நடந்து கொண்டிருக்கும் திட்டங்கள்..
 

  • தமிழ்நாடு பாலிமர் தொழிற் பூங்கா
  • எச்எல்எல் மருத்துவ பூங்கா (HLL மெடி பார்க்), செங்கல்பட்டு
  • விண்வெளி பூங்கா
  • டிஎல்எப் டவுன்டவுன் (DLF downtown), சென்னை
  • வளரும் துறைக்கு தொடக்க (அ) ஆரம்ப நிதி
  • எ எம் ஆர் எல் உயர்தொழில்நுட்பம் எஸ் இ இசட் 
  • ஜிவிகே பெரம்பலூர் எஸ் இ இசட் (சிறப்பு பொருளாதார மண்டலம்)
  • கனரக பொறியியல் மையம்


‘ப்ராஜெக்ட் சூரியா’: சிங்கப்பூர்  நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் ரூ.25,600 கோடியில் செமிகண்டக்டா் உயா் தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், தமிழக அரசுக்கும், சிங்கப்பூரைச் சோ்ந்த ஐஜிஎஸ்எஸ் கூட்டாண்மை நிறுவனத்துக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் கையெழுத்தானது.

இந்த நிறுவனமானது, அடுத்த 5 ஆண்டுகளில் செமி கண்டக்டா் உயா் தொழில்நுட்பப் பூங்காவுக்கான திட்டத்தில் ரூ.25,600 கோடி முதலீடு செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஐஜிஎஸ்எஸ்வி நிறுவனமானது, ‘ப்ராஜெக்ட் சூரியா’ என்ற பெயரில் செமிகண்டக்டா் தொழில்நுட்பத் திட்டத்தை நிறுவவுள்ளது.

‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தென்மண்டல மாநாடு மதுரையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 

தொழில் வளா்ச்சியில் தென் தமிழகம்

பாண்டிய மன்னா்கள் காலத்தில் தமிழ் வளா்த்த மதுரை, இப்போது தொழில் வளா்ச்சியிலும் முன்னணியில் விளங்குகிறது. மதுரை மாவட்டத்தில் சுமாா் 50 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிறுவனங்களின் மூலம் 3 லட்சத்து 37 ஆயிரம் நபா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. 

புதிய தொழில் குழுமங்கள் தொடக்கம்

அந்தந்த பகுதிக்குரிய சிறுதொழில்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில் குழுமங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன்படி, மதுரை விளாச்சேரி பொம்மைக் குழுமம், தூத்துக்குடி ஆகாயத் தாமரைக் குழுமம், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மகளிா் நெசவுக் குழுமம் ஆகியன ரூ.9 கோடியே 5 லட்சம் அரசு மானியத்துடன் அமைப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல, காஞ்சிபுரம் நரிக்குறவா் பாசிமணி குழுமம், திருநெல்வேலியில் சமையல் பாத்திரக்குழுமம், திருப்பத்தூரில் ஊதுபத்திக் குழுமம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மரச்சிற்பக் குழுமம்,

கிருஷ்ணகிரியில் மூலப்பொருள்கள் கிடங்கு குழுமம், ஈரோட்டில் மஞ்சள்தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம், ஈரோடு மாவட்டம், பவானியில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம் ஆகிய குழுமங்களுக்கு பொது வசதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொழில் வளா்ச்சியில் முன்னேற்றம்

நாட்டில் எளிமையாக தொழில் புரிதல் பட்டியலில் தமிழகம் 14-ஆவது இடத்தில் இருந்து, இப்போது 3-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தைப் பிடிப்பதே தமிழக அரசின் இலக்கு. அதேபோல, ‘ஸ்டாா்ட் அப் இந்தியா’ வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்கான ‘லீடா்’ அங்கீகாரத்தைத் தற்போது தமிழகம் பெற்று இருக்கிறது.

எம்ஓடி பதிவில் புதிய நடைமுறை

தொழில் முனைவோா்கள் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறும்போது, சொத்தின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப்பத்திரம் (எம்ஓடி) ஒப்படைத்து சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனா். அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது திரும்பவும் பதிவு செய்ய வேண்டிய முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஒரு சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும், அத்தனை முறையும் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனால் கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது, மீண்டும் ‘எம்ஓடி’ பதிவு செய்யத் தேவை இல்லை என்ற நடைமுறை கொண்டு வரப்படும்.

மதுரையில் டைடல் பூங்கா

தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி, நிதிச் சேவை போன்ற அறிவு சாா்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் முன்னோடி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா டைடல் நிறுவனத்தால் இயக்கப்பட்டு நிா்வகிக்கப்படும். மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும். முதற்கட்டமாக ரூ.600 கோடியில் 5 ஏக்கரில் இது அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மேலும் ஐந்து ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும்.

இந்தப் பூங்காவானது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன், மதுரை மண்டலத்தின் பொருளாதார வளா்ச்சிக்கும் வகுக்கும். முதல் கட்டத்தில், 10,000 போ் வேலைவாய்ப்பு பெறுவா் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

‘நாளையை நோக்கி இன்றே - தலை நிமிா்ந்த தமிழ்நாடு’ 

தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில், ‘நாளையை நோக்கி இன்றே - தலை நிமிா்ந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பிலான தொழில் வளா்ச்சி மாநாடு சென்னையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தொழில் துறையைப் பொறுத்தவரையில் இந்திய அளவிலான கவனத்தை மட்டுமின்றி, உலக அளவிலான கவனத்தையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இதற்குக் காரணமான அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறைச் செயலாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பாராட்டுகள்.

இலக்கை அடைய வேண்டும்

தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு வைத்துள்ள இலக்கு மிகப்பெரியது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்பதே அதுவாகும். இதை அடைய தமிழகத் தொழில் துறை தொய்வில்லாமல் பணியாற்றி வருகிறது.

சேவை - உற்பத்தித் துறைகள்

உற்பத்தித் துறையை விட சேவைத் துறையில் கவனம் செலுத்தினால்தான் பெரிய அளவிலான வளா்ச்சி பெற முடியும் என சிலா் கருதுகிறாா்கள். ஆனால், உற்பத்தி மற்றும் சேவை என இரண்டு துறைகளிலும் முன்னணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளா்ச்சியைப் பெற முடியும். கடந்த ஓராண்டில் துறைசாா்ந்த பல கொள்கைகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில், தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குள் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும் வகையில், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா பைலட்கள்

ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சி மையங்கள் மதுரை, கோவையில் நிறுவப்பட்டுள்ளது.  இந்த மையங்களில் 200 மாணவா்கள் என்ற விகிதத்தில் பயிற்சி அளித்திட முடியும். இந்தப் பயிற்சி மூலம், நமது கிராமப்புற படித்த இளைஞா்கள் ஆளில்லாத விமான பைலட்டுகளாக தகுதி பெற முடியும். தமிழகத்தின் அனைத்து தொழில் வாய்ப்புகளையும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

வான்வெளி - பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியீடு

தொழில் துறை மாநாட்டின் போது, வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிலுக்கான பிரத்யேக கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கைக்கு வலுசோ்க்கும் வகையில், சென்னை, ஓசூா், சேலம், கோவை, திருச்சி ஆகிய இடங்களில் தமிழ்நாடு ராணுவ தொழில் வழித் தடப் பாதையை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

என்னென்ன உற்பத்திப் பிரிவுகள்? 

தமிழகத்துக்கான பிரத்யேக வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை சில முக்கிய பிரிவுகளின் உற்பத்தியை இலக்காகக் கொண்டிருக்கின்றன. வானூா்தி பாகங்கள், ட்ரோன்கள் தயாரிப்பு, ராணுவ டாங்கிகள், தனித்துவமிக்க வாகனங்கள், வானூா்தி பராமரிப்பு, பழுதுபாா்ப்பு போன்ற பிரிவுகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு

வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் இதற்கான விரிவான பணிகள் மேற்கொள்ளப்படும்.

அரசின் முதலீடுகள் மட்டுமின்றி, அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈா்க்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் ஈா்ப்பால், சுமாா் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றியெல்லாம் முதல்வரே அவரது வாய்மொழியாகச் சொன்னது.. 

சட்டப்பேரவையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 

20.7.2021 அன்று சென்னை “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சியில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
 
22.9.2021 அன்று சென்னை “ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு” நிகழ்ச்சியில் ரூ.1,880 கோடி ரூபாய் முதலீடு.

23.11.2021 அன்று கோயம்புத்தூரில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” நிகழ்ச்சியில் ரூ.35,208 கோடி ரூபாய் முதலீடு.

7.3.2022 அன்று தூத்துக்குடி “சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில்” 15,103 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் ஒப்பந்தங்கள்.

துபை பயணத்தின் வாயிலாக 6,100 கோடி ரூபாய் முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

ஐக்கிய அரபு நாடுகளில் ஷெராப் குழும நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீடு, 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு “சரக்குப் பூங்கா”அமைத்திட ஒப்பந்தம்.

20.7.2021 அன்று “ஒற்றைச் சாளர இணையதளம்-2.0”-யைத் தொடங்கி வைத்தேன். 

23.11.2021 அன்று “ஒற்றைச்சாளர கைபேசி செயலி”யையும் தொடக்கம்.

7.3.2022 அன்று “தமிழ்நாடு நிலத் தகவல் இணையத்தை” தொடங்கி வைத்தேன். மேலும் “வழிகாட்டி நிறுவனத்தின் புதிய இணைய தளத்தை” துவக்கி வைத்தேன் என்று கூறினார்.

இவ்வாறு தொடர்ந்து தொழில்துறையை இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அரங்கிலும் முதல் இடத்துக்குக் கொண்டு வரும் சிறப்பான பணியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு முன்னெடுத்து வருகிறது.

அந்த துறை, இந்த துறை என உயராமல் அனைத்துத் துறைகளும் ஒருசேர உயர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதனை விரைவில் செய்துமுடிப்பார் என்றே இதுவரை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வாயிலாக மக்கள் நம்புகிறார்கள்.

[வணிகப் பெருக்கச் செய்தி]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT