வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகள் ஒரு நிலையற்று, ஏற்றத்தாழ்வுடன் வணிகமாகின்றன.
தொடர்ந்து நாளாவது நாளாக அதானி குழும பங்குகள் சரிவை சந்திக்கின்றன. அதானி எண்டர்பிரைசஸின் ரூ.20,000 கோடி ஃபாலோ-ஆன் பொதுச் சலுகை (எஃப்பிஓ) சந்தாவைப் பெற இன்றுதான் இறுதி நாள் என்றபோதும், வணிகத்தின்போது, குறைவானத் தேவையே இருந்துவருகிறது.
அதானி குழுமத்தின் 9 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் பங்குகள் செவ்வாயன்றும் இறங்குமுகத்திலேயே வணிகமாகின்றன. இதிலும் மூன்று நிறுவனங்களின் பங்குகள் இன்று முற்பகல் 12 மணியளவில், இதுவரைக் காணாத விலை சரிவைக் கண்டன.
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் கடந்த மூன்று நாள்கள் வணிகத்தில் 5.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்திருந்தன.
இந்த நிலையில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை மதிப்புகள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் சரிவுடனே வணிகமாகின்றன.
அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் தொடர் சரிவு ஏற்பட்டு இது தற்போது 5.57 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, அதானி குழும பங்குகளின் மதிப்பு ஜனவரி 24ஆம் தேதி நிறைவின்போது ரூ.19.20 லட்சம் கோடியாக இருந்தது. இது நேற்று வர்த்தகத்தின்போது ரூ.13.63 லட்சம் கோடியாக சரிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதானி டோட்டல் கேஸ். அதானி கிரீன் டேங்க், அதானி வில்மர், அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1 முதல் 10 சதவிகித விலை சரிந்து வணிகமாகிறது.